பழங்குடி மக்களுக்கு 25 கிலோ அரிசி, மளிகை, காய்கறிகள்: கோனேரிக்குப்பம் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் உதவி

பழங்குடி மக்களுக்கு 25 கிலோ அரிசி, மளிகை, காய்கறிகள்: கோனேரிக்குப்பம் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கம் உதவி
Updated on
1 min read

ஊரடங்கால் வேலைவாய்ப்பின்றித் தவித்து வரும் பள்ளிப்பாக்கம் பழங்குடி மக்களுக்கு கோனேரிக்குப்பம் பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் உதவியுள்ளனர்.

இந்த முயற்சியை முன்னெடுத்தவர்களில் ஒருவரான ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் இதுகுறித்துக் கூறும்போது, ''கரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பின்றி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம் அருகே உள்ள பள்ளிப்பாக்கம் பழங்குடியின மக்கள் தவித்து வந்தனர்.

அங்குள்ள 21 பழங்குடியினர் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அடங்கிய அரிசி மூட்டைகள்,10 வகை காய்கறிகள், 35 வகை மளிகைப் பொருட்கள், 50 முகக் கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த முயற்சியை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ராஜேஷ், குமார், கணபதி, ஆரோக்கிய ராஜ், வாணி, மகாலட்சுமி, வரதன், மகிமை ராஜேஷ், தேவி, ஷீலா, வழக்கறிஞர் ஏழுமலை ஆகியோர் அடங்கிய பழங்குடியினர் நலன் காக்கும் குழு முன்னெடுத்தோம்.

எங்களுடன் ஜப்பான் வாழ் தமிழர்களான கவிதா சிவக்குமார், பாரிவேல் முருகன், அமெரிக்க வாழ் தமிழர் பெஞ்சமின், கவிதா பாண்டியன், ராஜ நடேசன் ஆகியோர் உதவினர். கோனேரிக்குப்பம் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தினரும் இதில் இணைந்தனர்.

அடுத்தகட்ட முயற்சியாக, வடசிறுவளூர் பள்ளியைச் சார்ந்து வாழும் பழங்குடியினர் மக்களுக்கு உதவத் திட்டமிட்டுள்ளோம்'' என்றார் ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in