

திண்டுக்கல்லில் டாக்டர்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் கரோனா பரிசோதனை செய்வதற்கென சிறப்பு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாதிப்புக்குள்ளானவர்களின் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
பரிசோதனை மேற்கொள்ளும்போது டாக்டர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில் சிறப்பு கண்ணாடி கூண்டு ஒன்று திண்டுக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கண்ணாடிக்கூண்டுக்குள் பரிசோதனை செய்ய உள்ளவர் இருக்க, முழு பாதுகாப்பு உடைகளுடன் கையுறை அணிந்து வெளியில் இருந்து கூண்டுக்குள் கைகளை மட்டும் விட்டு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
ஒரு நபருக்கு சோதனை எடுத்தபிறகு மீண்டும் ஒரு நபருக்கு சோதனை மேற்கொள்ளும்போது கையுறைகள் மாற்றப்படுகிறது.
இதன்மூலம் மருத்துவப்பரிசோதனை செய்யும் டாக்டர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவுவது தடுக்கப்படும். டாக்டர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பழநியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் டாக்டர்களை பாதுகாக்கும் வகையில் கண்ணாடிகூண்டு அமைக்கப்படவுள்ளது.