

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எமதர்மன் வேடமணிந்த நபர் மூலம் போலீஸார் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
கரனோ வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தையும், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் வரவலைக் கடுப்படுத்தும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கைடிபிடிக்க பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும், காய்கறி சந்தை, மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகளில் பொதுமக்கள் நெருக்கமாக நின்றே பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
பலர் வீடுகளில் இருப்பதைத் தவிர்த்து குழந்தைகளையும் சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு சாலைகளில் பைக்கில் சுற்றிவருகின்றனர். போலீஸார் பலமுறை பலவாறு எச்சரித்தும் பல இடங்களில் பொதுமக்கள் சுய ஒழுங்கை கடைபிடிப்பது இல்லை.
இந்நிலையில், கடைவீதிகள், மார்க்கெட் போன்ற பகுதிகளில் நெருக்கமாக நிற்கும் பொதுமக்களிடம் கரோனா பரவுவதை விளக்கும் வகையிலும், அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை விளக்கும் வகையிலும் எமதர்மன் வேடமணிந்த நபர் மூலம் அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கூட்டமாக நிற்பது, தேவையின்றி பைக்கில் சுற்றுவது, சமூக விலகளைக் கடைபிடிக்காமலும், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருக்கும் நபர்களை பிடித்துவிடுவேன் எனக் கூறி எமதர்மன் வேடமணிந்தவர் பொதுமக்களிடையே அச்சத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
மேலும், அருப்புக்கோட்டை காய்கறி விற்பனையகத்திலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்களையும் முகக்கவசம் அணியாதவர்களையும் பிடித்து 'இனிமேல் முகக்கவசம் அணிந்து வருவேன், சமூக இடைவெளியை பின்பற்றுவேன்' என போலீஸார் உறுதிமொழி ஏற்க செய்தனர்.