கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை; இந்தியாவுக்கே முன்னுதாரணமான தமிழகம்: அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பெருமிதம்

மதுரையில் நடந்த கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் பேசினார் அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.
மதுரையில் நடந்த கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் பேசினார் அமைச்சர் ஆர்பி.உதயகுமார்.
Updated on
1 min read

மதுரை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் உலகத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடந்தது. இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பேசியதாவது:

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவருக்கும் ஒரு மாத ஊக்க ஊதியத் தொகை வழங்கப்படும். களப் பணியில் உள்ளபோது, நோய்த் தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை, சிகிச்சை வழங்கப்படும் என அறிவித்து மருத்துவர்களின் மனதில் முதல்வர் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தியாவிலேயே ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பே முதல் முதலாக சிறப்பு நிவாரணத் தொகுப்பாக ரூ.3,780 கோடி அறிவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவின்போது, ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என, உரிய நேரத்தில் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு வழங்கினார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளித்துள்ளார். தினமும் 6 லட்சம் ஏழைகளின் பசியைப் போக்குகிற வகையில் அம்மா உணவகம் செயல்படுகிறது. முதியோர், மாற்றுத் திறனாளி, ஆதரவற்றோர் என சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சிறப்பு ஏற்பாட்டில் உணவு வழங்கப்படுகிறது. தினமும் 10,000 காய்கறி, பழங்கள் தொகுப்புகளை மக்களிடையே சேர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவுக்கே முன்னுதாரணமாக தமிழக அரசு செயல்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டிஜி.வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன், அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in