Last Updated : 13 Apr, 2020 07:26 AM

 

Published : 13 Apr 2020 07:26 AM
Last Updated : 13 Apr 2020 07:26 AM

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றியதால் வழக்கு; கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்: அரசு வேலையில் சேரவும் வெளிநாடு செல்லவும் முடியாது

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் நடமாடுவோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்படுகிறது. இதில் சிக்கும் இளைஞர்கள் அரசு மற்றும் தனியார் வேலையில் சேர்வதிலும், வெளிநாடு செல்வதிலும் சிக்கல் ஏற்படும் என்பதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. அத்தியாவசிய தேவை களுக்காக மட்டும் பொதுமக் கள் வெளியில் வர அனுமதிக் கப்பட்டுள்ள நிலையில், இளை ஞர்கள் பலர் பொழுதுபோக் குக்காக வாகனங்களில் ஊர் சுற்றுகின்றனர். இவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு கைது செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர்.

அதன்படி, திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் அடங்கிய மத்திய மண்டல காவல்துறை சார்பில் 32,837 வழக்குகளின் கீழ் 36,084 பேரையும், திருச்சி மாநகரில் 1,048 வழக்குகளின்கீழ் 2,555 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கைதா கும் நபர்களை சிறைக்கு அனுப் பாமல் உடனடியாக ஜாமீனி லேயே விடுவித்தாலும்கூட, இவர்கள் மீதான வழக்குகள் காவல்துறையினரின் தொடர் நடை முறைகளுக்கு உட்படுத்தப்படும் வகையிலேயே உள்ளன. இதனால் வழக்கில் சிக்கியவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

தனியார் வேலையும் கிடைக்காது

இதுகுறித்து மத்திய மண்டல ஐ.ஜி அ.அமல்ராஜ் கூறும்போது, ‘ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்படும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், கொள்ளைநோய் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதில் குற்றவாளியாக சேர்க்கப்படும் நபர்களால் வழக்கு முடியும் வரை அரசு வேலைக்குச் செல்ல முடியாது. பாஸ்போர்ட் பெற முடியாது. கல்வி, தொழில், மருத்துவத்துக்காக வெளி நாடும் செல்ல முடியாது. தற்போது, முன்னணி தனியார் நிறுவனங்களில்கூட காவல் துறை யினரின் விசாரணை அறிக்கை பெற்ற பிறகே ஒருவரை பணிக்கு அமர்த்துவதால், இவ்வழக்கில் சிக்குவோரால் முன்னணி தனியார் நிறுவனங்களி லும் வேலைக்கு சேர முடியாது. எனவே, இளைஞர்களும், பொது மக்களும் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்து வழக்கில் சிக்காமல், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்றார்.

வாய்தாவால் வீண் அலைச்சல்

முன்னாள் அரசு வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘ஊரடங்கு உத்தரவை மீறுவது தொடர்பாக, ஒரேநேரத்தில் லட்சக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்படுவதால், அவற்றின் மீதான குற்றப்பத்திரிகை தயார் செய்தல், விசாரணை உள்ளிட்ட நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்ள பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகலாம். அதுவரை இவ்வழக்கின் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள நபர் வாய்தா வுக்காக அலைந்து, மன உளைச்சல் ஏற்படும். எனவே, இன்றைய சந்தோஷத்துக்காக ஊர் சுற்றா மல், நாளை நடக்க உள்ள விபரீதத்தை உணர்ந்து வீட்டில் இருப்பதே சிறந்தது’' என்றார்.

விதிமீறுவோருக்கு என்ன தண்டனை?

இதுதொடர்பாக திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கே.முரளிசங்கர் வெளியிட்டு, பொதுமக்களிடம் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரத்தில், ‘ ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் உலா வருவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188-ன் (அரசின் பொது ஊரடங்கு உத்தரவை மீறுதல்) கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். பிரிவு 270-ன் கீழ் (உயிர்கொல்லி நோயை பரப்பும் வகையில் அலட்சியமாக நடந்து கொள்ளுதல்) 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x