Published : 13 Apr 2020 07:05 AM
Last Updated : 13 Apr 2020 07:05 AM

ஊரடங்கு அமலில் இருப்பதால் வீடுகளில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய கிறிஸ்தவர்கள்

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை தங்கள் வீடுகளிலேயே கொண்டாடினர்.

யேசு உயிர்த்தெழுந்த தினத்தைகிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டி கையாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. வழக்கமாக ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். ஆனால் ஊரடங்கு நடவடிக்கை காரணமாக அனைத்து தேவாலயங்களிலும் மார்ச் 21 முதல் அனைத்துவழிபாடுகளும் நிறுத்தப்பட்டுள் ளன. ஒருசில ஆலயங்களில் பங்குதந்தை தனித்திருப்பலி நிறைவேற்றி வருகிறார்கள். தடை உத்தரவு காரணமாக கிறிஸ்தவர்கள் யாரும் ஆலயங்களுக்குச் செல்வதில்லை.

இத்தகைய சூழலில் ஊரடங்குஉத்தரவு காரணமாக ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் பங்குகொள்ளும் வகையில் சிறப்பு ஆராதனையோ, திருப்பலியோ நடைபெறவில்லை. ஆலயத்தின் பங்குத்தந்தையர்கள் மட்டுமே தனித்திருப்பலியையும், சிறப்பு ஆராதனை யையும் நடத்தினர். சென்னை மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, சாந்தோம் பேராலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு நடத்திய ஈஸ்டர் ஆராதனை, தொலைக்காட்சி வழியாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி பங்கேற்றனர்.

இதேபோன்று சிஎஸ்ஐ தேவாலயங்களில் போதகர்கள் நடத்திய ஈஸ்டர் ஆராதனை நிகழ்ச்சியை அந்த சபையைச் சேர்ந்த மக்கள் யூடியூப் சேனல் வாயிலாக பார்த்தனர். கரோனா பாதிப்பு காரணமாக ஈஸ்டர் பண்டிகையை வழக்கம்போல் உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என அருட்தந்தையர்களும், கிறிஸ்தவ மக்களும் வேதனையுடன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x