Published : 13 Apr 2020 07:03 AM
Last Updated : 13 Apr 2020 07:03 AM

அம்பேத்கர், தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை

ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் ஏப்.17-ல்தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவில் அவர்களது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில், ஏப்ரல் 14-ம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளும், 17-ம்தேதி தீரன் சின்னமலை பிறந்த நாளும் சென்னையில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் உள்ளஅம்பேத்கர் சிலைக்கும், கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கும் அரசு சார்பில் மரியாதை செய்யப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் கடந்த 11-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தியபோது, பொதுமக்களின் நலன் கருதியும், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

எனவே, அம்பேத்கர் பிறந்த நாள் விழா, தீரன் சின்னமலை பிறந்த நாள் விழாவின்போது அவர்களது உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மட்டும்மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

144 தடை உத்தரவு காரண மாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், நினைவிடங்களுக்கு செல்வதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும்வரை மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் கூடாமல் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x