Last Updated : 12 Apr, 2020 07:30 PM

 

Published : 12 Apr 2020 07:30 PM
Last Updated : 12 Apr 2020 07:30 PM

நீண்ட போராட்டத்துக்கு பின் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேற்கு வங்க பெண்மணி

விழுப்புரம்

நாகைமாவட்டம், மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் கடந்த சில நாட்களுக்கு முன் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் ரயில் நிலையத்தில் மக்களை விரட்டியபோது மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சாவித்திரி என்கிற மனநலமற்ற பெண் பாதிக்கப்பட்டார். இது குறித்து விசாரித்த ரயில்வே பாதுகாப்புத்துறை கிருஷ்ணமூர்த்தியை பணி இடை நீக்கம் செய்தது.

ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட பெண் எங்கு செல்வது என தெரியாமல் தவித்தபோது மயிலாடுதுறையில் இயங்கும் ”அறம் செய்” என்ற சமூக நல அமைப்பினர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அவரை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற தகவல் வெளியானது.

இது குறித்து மயிலாடுதுறை ”அறம் செய்” சமூக அமைப்பின் நிறுவனர் சிவாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

அறம் செய் அமைப்பு மூலம் சுற்று சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை செய்துவருகிறோம். ரயில்வே போலீஸாரால் விரட்டப்பட்ட மனநல பாதிப்பிற்குள்ளான பெண் சாவித்திரியை பாதுகாப்பின்றி உள்ளார் என்ற தகவல் கிடைத்ததும் எங்கள் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டோம். அதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால் அப்பெண்ணை ஆட்டோ ஓட்டுனர்களின் பாதுகாப்பில் வைத்தோம்.

மறுநாள் அதற்கான முயற்சி மேற்கொண்டோம். தனியார் மனநல காப்பகங்களில் சேர்க்க பயம். அவரோ மனநலமில்லாதவர் என்பதால் பாலியல் வன்முறையோ, உடல் உறுப்பு திருட்டோ நிகழ சாத்தியம் இருக்கிறது என்பதால் அரசாங்க மனநல காப்பகத்தில் சேர்க்க முடிவெடுத்தோம். .அருகில் திருவாரூரில் அரசு மனநலக் காப்பகம் இருக்கிறது. ஆனால் அதில் சேர்க்க ஏகப்பட்ட நடமுறை விஷயங்கள் இருக்கின்றன. முதலில் போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆர் போட்டு அந்தப் பெண்ணை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் உத்தரவுடன்தான் அங்கு அழைத்துச் சென்று சேர்க்க இயலும் என்ற சட்டம் தெரியவந்தது.

பின்னர் தாய் சேய் நல உதவிக்கு 102 என்கிற அரசு வாகன உதவியோடு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநலப்பிரிவு மருத்துவர் மணிகண்டனை தொடர்பு கொண்டு சிகிச்சை அளிக்க கேட்டபோது போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஏற்பு சான்று ( சி எஸ் ஆர்) பெற்றுக்கொண்டு அழைத்துவருமாறு கூறினார். அதன்படி மயிலாடுதுறை இன்ஸ்பெக்டரை கேட்டு கொண்டதன் பேரில் சி எஸ் ஆர் போட்டுக்கொடுத்தார். அதன் அடிப்படையில் 102 வாகனத்தில் சாவித்ரியை ஒரு பெண் காவலருடன் எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வந்து சேர்த்தோம் என்றார்.

தற்போது சாவித்திரி எப்படி இருக்கிறார் என மனநல மருத்துவர் மணிகண்டனை தொடர்பு கொண்டு கேட்டபோது, மிகவும் நன்றாக உள்ளார். சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கிறார். விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

பட விளக்கம்; விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மனநலப்பிரிவில் சிகிச்சைபெற்றுவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாவித்ரியுடன் செவிலியர்கள் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x