Last Updated : 12 Apr, 2020 06:04 PM

 

Published : 12 Apr 2020 06:04 PM
Last Updated : 12 Apr 2020 06:04 PM

ஊரடங்குக்கு எதிராக தட்டு முழக்கப் போராட்டம்: மதுரையில் இளைஞர்கள் இருவர் கைது

144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று கூறிய காவல்துறையினர், மதுரை மாநகரில் தட்டு முழக்கப் போராட்ட ஏற்பாடுகளைச் செய்த மதுரை இளைஞர்கள் இருவரைக் கைது செய்தனர்.

ஊரடங்கைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) சார்பில், அகில இந்திய அளவில் ஞாயிற்றுக்கிழமை தட்டு முழக்கப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

‘திட்டமிடாத ஊரடங்கால் பரிதவிக்கும் மக்களுக்கு உணவு கிட்டங்கியைத் திற, கூலி இழப்பை ஈடுகட்டு’ போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்கள், வாடிப்பட்டி ஒன்றியம், மதுரை மாநகரத்தில் போராட்ட ஏற்பாடுகள் நடந்தன.

144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் எந்தப் போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று கூறிய காவல்துறையினர், மதுரை மாநகரில் போராட்ட ஏற்பாடுகளைச் செய்த சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த தமிழ் (புரட்சிகர இளைஞர் இயக்கம்), காளீஸ்வரன் (அகில இந்திய மாணவர் கழகம்) ஆகியோரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்)யின் மதுரை மாவட்டக் குழு உறுப்பினர் மதிவாணன் கூறுகையில், "மத்திய அரசு வெறும் 4 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்து ஊரடங்கை அமல்படுத்திய காரணத்தால், அன்றாடக் கூலியை நம்பி வாழ்கின்ற மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், கையிருப்பைச் செலவு செய்தும், கடன் வாங்கியும் நாட்களைத் தள்ளுகின்றனர்.

கரோனா நோய் எதிர்ப்பில் மக்களின் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியப் பங்குண்டு. நாட்டின் நலனுக்காக வீட்டில் தன்னை முடக்கிக்கொள்ளும் ஏழை மக்களுக்கு அரசு உதவிகள் செய்து வீட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு அறிவித்த ரூபாய் 1000 இன்றைய கூடுதல் விலைவாசியில் ஓரிரு நாட்களுக்குக் கூட காணாமல் போய்விட்டது.

ரேஷன் பொருட்களும் பலருக்கு இன்னமும் வந்து சேரவில்லை. பிற மாநிலங்களுக்குச் சென்று உழைத்துப் பிழைக்கும் மக்கள் அங்கேயே சிக்கிக்கொண்டுள்ளனர். கூலியின்றி, வேலையின்றி, தங்குவதற்கு இடமின்றிப் பரிதவிக்கின்றனர். எனவே, பிரதமர் காட்டிய வழியில், 144 உத்தரவுக்குக்குக் கட்டுப்பட்டு, சமூக இடைவெளி அளித்து தட்டுகளை முழங்கி பசியைத் தீர்க்க நடவடிக்கை எடு என்று மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தோம்.

போராட்டத்துக்குத் தடை விதித்து மதுரையில் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும்கூட, மதுரை, சென்னை, விழுப்புரம், கடலூர், சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, நாகை, தஞ்சை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x