Published : 12 Apr 2020 02:28 PM
Last Updated : 12 Apr 2020 02:28 PM

சென்னையில் பெண் போலீஸிடம் 71/2 சவரன் செயின் பறிப்பு: கரோனா ஊரடங்கிலும் கைவரிசை காட்டிய நபர்கள்

கரோனா ஊரடங்கு நிலையில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் போலீஸிடம் செயினை பறித்து தப்பிச் சென்றுள்ள மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரோனா பாதிப்பு பரவாமல் இருக்க 144 தடையுத்தரவு போடப்பட்டு வாகனங்களில் காரணமின்றி திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர் போலீஸார்.

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் அவசியமின்றி திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய நிலை உள்ளது.

ஆனாலும் இந்த ரணகளத்திலும் தங்கள் கைவரிசையை அதுவும் பெண் காவலரிடமே காட்டியுள்ளனர் இரண்டு நபர்கள். திருமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் ஆஷா. சென்னை அம்பத்தூர் அடுத்த கருக்கு பகுதியில் வசித்து வருகிறார்.

வெள்ளியன்று இரவு பணிக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காவலர் உடை அணியாமல் சாதாரண சிவில் உடையில் சென்றுள்ளார்.

அவரது இரு சக்கர வாகனம் அம்பத்தூர் தொழிற்பேட்டை அடுத்த பட்டரைவாக்கம் சாலை வழியாக சென்று கொண்டு இருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஆஷா கழுத்தில் அணிந்திருந்த ஏழரை சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

செயினைப் பறித்தவர்கள் செயலால் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற ஆஷா நிலைத் தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். இதில் நல்வாய்ப்பாக அவருக்கு பெரிய அளவில் காயமின்றி தப்பித்துள்ளார்.

செயின் பறிப்பு குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸில் ஆஷா அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக குற்ற எண்ணிக்கைகள் குறைந்துள்ள நிலையில் பெண் காவலரிடமே செயினைப்பறித்துச் சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x