Published : 12 Apr 2020 11:26 AM
Last Updated : 12 Apr 2020 11:26 AM

கரோனாவால் குறையும் மரணங்கள்: ஆச்சர்யப்படவைக்கும் உண்மை: சு.வெங்கடேசன் எம்.பி.யின் பதிவு

கரோனா பற்றிய நெகட்டிவ் செய்திகள் பல வந்தாலும், சமூகத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாற்றத்தை அது செய்துள்ளது. சாகித்திய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இதுகுறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவு:

“மதுரை கீரைத்துறையில், ரோட்டரி மிட் டவுன் கிளப்பால் பராமரிக்கப்படும் மின்மயானம் ஒன்று இருக்கிறது. அஞ்சலி மின்மயானம் என்று அதற்குப் பெயர். மிகச்சிறப்பான முறையில் பராமரித்து நிர்வகிக்கப்படும் இந்த மின்மயானத்தைப்பற்றிச் செய்திதாள்களிலும் வார இதழ்களிலும் பாராட்டுக் கட்டுரைகள் பல எழுதப்பட்டுள்ளன.

எங்கள் அன்புத்தோழர் தமிழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் அவருக்கேயுரிய நகைச்சுவை உணர்வோடு கூறுவார் “மயானத்த இவ்வளவு அழகா வச்சா, மனுசனுக்கு சாவுமேல ஆசை வந்திருமப்பா”.

இறுதிச்சடங்கிற்கான கட்டணமும் மிகக்குறைவே. ரூ 1350 மட்டுமே. சமீபத்தில் மரணமடைந்த எங்கள் தோழர் கே.தேவராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த சிவகாசிக்குப் போயிருந்தேன். அவரின் இறுதிநிகழ்ச்சி அங்குள்ள மின்மயானத்தில்தான் நடந்தது.

அதற்கான கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ரூபாய் 5000-க்கும் மேல் கட்டணமாக எழுதப்பட்டிருந்தது.
இறுதிநிகழ்ச்சி முடிந்துவரும்பொழுதே விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாணிக்கம் தாகூரைத் தொடர்புகொண்டு பேசி, தலையிட்டுக் குறைக்கச் சொல்லுங்கள் என்றேன்; அவரும் தலையிடுவதாகச் சொன்னார்.
இரண்டு நாள்களுக்கு முன்பாக அஞ்சலி மின்மயானத்தின் நிர்வாகப் பொறுப்பைக் கவனிப்பவருடன் பேசிக்கொண்டிருந்தேன். ஊரடங்கால் என்னனென்ன பாதிப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அப்பொழுது அவர் சொன்னார், “மரணத்தின் எண்ணிக்கை குறைந்துவிட்டது” என்று. எனக்கு இந்த தகவல் ஆச்சரியத்தின் திறவுகோலாக இருந்தது. உடனே அவர் ஊழியர்களிடம் பேசி கடந்த நான்குமாதக் கணக்குவிபரங்களை எடுக்கச் சொன்னேன். (அதில் உள்ள மாதவாரியான புள்ளிவிபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன).

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களையும் கூட்டினால் 91 நாள்கள். இவற்றில் மொத்தம் 950 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் இயல்பு மரணங்களின் எண்ணிக்கை 868. தற்கொலை மரணங்கள் 56, விபத்துமரணங்கள் 26 ஆகும்.

இந்த மூன்றுமாதக் கணக்குகளின் அடிப்படையில் பத்துநாள்களில் நிகழ்ந்த மரணங்களைக் கணக்கிட்டால் மொத்த மரணங்கள் 104. அவற்றுள் தற்கொலை மரணங்கள் 6 விபத்து மரணங்கள் 2. ஆனால் ஊரடங்கு நடைமுறையான பின் மார்ச்25 முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பத்து நாள்களில் நிகழ்ந்துள்ள மொத்த மரணம் 88, தற்கொலை 0, விபத்து 1.

இந்தப் புள்ளிவிபரங்கள் யாரையும் சற்றே ஆச்சரியப்பட வைப்பவை. விபத்தைப் பொருத்தவரை 50% குறைந்துள்ளது. அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்கொலைகள் 100% குறைந்துள்ளன. அதற்குக் காரணம் வீட்டில் அனைவரும் மொத்தமாய் இருக்கின்றனர். இதனால் தனிமை தவிர்க்கப்படுகிறது; தற்கொலை நோக்கிய மனப்போக்கு தடுக்கப்படுகிறது. எல்லோரும் ஒன்றாய் இருப்பதால், ஒருவேளை தற்கொலை எண்ணமேகூட தட்டிப்போகலாம்.

மொத்த மரணத்தைப் பொருத்தவரை 12% குறைந்திருக்கிறது. இது எப்படி? இதற்கான காரணங்கள் எவையாக இருக்க முடியும்? பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. அப்படியென்றால் மரணங்கள் அதிகரித்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் 12% குறைந்துள்ளது.

இந்தத் தலைகீழ் உண்மையை எப்படிப் புரிந்துகொள்வது? நாம் இதுவரை எவையெல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருதோமோ, அவற்றையெல்லாம் கேள்விக்கு உள்ளாக்குகிற உண்மை இது. இந்த உண்மைக்குள் எத்தனையோ விசயங்கள் புதைந்துகிடக்கின்றன.

பல நாள்கள் ஊரடங்குபோட்டு, ஊரையே அசையவிடாமல் ஆக்கி அந்தக் காலத்தில் மயானக்கணக்குகளை ஆய்வுசெய்யும் வாய்ப்பு நமக்கு முன்பு யாருக்கும் கிடைத்ததில்லை. கரோனா காலத்துக்குப் பின்பும் யாருக்கும் கிடைக்கப்போவதில்லை. இந்தக் காலத்தில் மட்டுமே கண்டறியப்பட வாய்புள்ள உண்மைகள் இவை.

ஆய்வாளர்களே, மருத்துவம், சமூகம், கட்டமைப்பு, சட்டவிதிகள் என அனைத்துறைகளின் வழியேயும் ஆய்வினை நிகழ்த்தவேண்டிய உண்மைகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. புள்ளிவிபரங்களின் வழியே மக்களுக்கு உண்மைகளைச் சொல்லுங்கள்.

தமிழ்நாட்டில் எண்ணற்ற மின்மயானங்கள் இருக்கின்றன. முறையான கணக்குகளும் இருக்கும். இவற்றின் வழியே நீங்கள் கண்டறியபோகும் உண்மை மிகமிக முக்கியமானதாகும்.

மதுரை மக்களே! இந்த ஊரடங்குக் காலத்தில் அஞ்சலியின் கணக்கிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்தி என்ன தெரியுமா?

மரணங்கள்கூட நம்மைவிட்டு விலகிப்போகின்றன! நம்பிக்கையோடு வீட்டில் இருங்கள்!!”

இவ்வாறு சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

சு.வெங்கடேசனின் பதிவுப்போன்றே சமூக வலைதளத்திலும் ஒரு பதிவு மற்றவர்களால் அதிகம் விரும்பி பகிரப்படுகிறது. அந்தப்பதிவு வருமாறு:

“படித்ததில் சிந்தனையைத் தூண்டிய செய்தி.

மருத்துவமனைகளில் OPD கள் மூடப்பட்டுள்ளன. இது இருந்தபோதிலும், அவசர பிரிவில் எந்த அவசரமும் இல்லை. நோய்கள் இவ்வளவு எவ்வாறு குறைக்கப்பட்டன? சாலை விபத்துக்கள் தவிர, மாரடைப்பு, மூளை ரத்தக்கசிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை ...

அது எப்படி நடந்தது? யாரிடமிருந்தும் புகார் எதுவும் இல்லை. யாரும் சிகிச்சை பெறவில்லையா? தகனத்திற்கு தினமும் வரும் இறந்த உடல்களின் எண்ணிக்கை 25-30 சதவீதம் குறைந்துள்ளது. பல இடங்களில், சராசரியாக, தினமும் 80 முதல் 100 இறந்த உடல்கள் வந்தன. ஆனால் இப்போது 20 அல்லது 25 இறந்த உடல்கள் மட்டுமே வருகின்றன, அதுவும் கரோனா இருக்கும் போது.

இப்போது மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் கொரோனாவுக்கு முந்தைய நாட்கள்.எல்லா நோய்களும் மறைந்துவிட்டன என்பது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு கேள்வியை எழுப்புகிறது.

கொரோனா வைரஸ் மற்ற நோய்களையும் கொன்றதா? அல்லது இதற்கு முன்னர் மக்களைக் கொன்ற மருத்துவ நிறுவனங்களின் வணிகமயமாக்கலா?கார்ப்பரேட் மருத்துவமனை கலாச்சாரம் தோன்றிய பின்னர், சிறிதளவு சளி மற்றும் இருமல் கூட தேவையற்ற சோதனைகள் மற்றும் மருந்துகளின் நீண்ட பட்டியல் மூலம் பெரிய மசோதாவை ஈர்க்கத் தொடங்கியது.

நோயாளிகளை மீண்டும் மீண்டும் மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தும் மனப்பாங்கு. மக்களின் மனதில் பெரும் பயம் உருவாக்கப்பட்டது. மெடிக்கல் மற்றும் பார்மா இண்டஸ்ட்ரீஸ் மிகப்பெரிய வருவாயுடன் செழித்தது

ஆனால் தற்போதைய காட்சி என்னவென்றால், பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக கிடக்கின்றன. டாக்டர்களின் சேவையின் முக்கியத்துவத்தை குறைக்க நான் முயற்சிக்கவில்லை. கோவிட் 19 ஐ வெல்ல மருத்துவ வல்லுநர்கள் வழங்கும் சேவைகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

ஆயினும், மற்றொரு அம்சத்தையும் பார்க்க வேண்டி இருக்கிறது. மக்கள் வீட்டு உணவை சாப்பிடுகிறார்கள். அதுவும் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

உடல் அமைப்பு தனது வேலையைச் சரியாகச் செய்கிறது.மக்களுக்கு சுத்தமான தண்ணீரும், கலப்படமற்ற உணவும் கிடைத்தால், பாதி நோய்கள் மறைந்துவிடும். சரியான எடுத்துக்காட்டு.

இருப்பினும், பூட்டுதலில் சிக்கல்கள் தவிர்க்க முடியாதவை, ஆனால், இது சில தகவல் மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களையும் அளித்துள்ளது”.

இவ்வாறு ஒரு பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மைதான், விபத்து பலி இல்லை, வீடுபுகுந்து திருட்டு இல்லை, கொலை, கொள்ளை மறைந்து போயுள்ளது. சில சச்சரவுகள் ஓரிரு இடத்தில் இருந்தாலும் குடும்ப உறவுகள் மேம்பட்டுள்ளது.

பரஸ்பர விசாரிப்புகள் அதிகரித்துள்ளது. தூர்தர்ஷன் அதிகம் பார்க்கப்படும் சானலாக உள்ளது. பர்கரும், பீட்சாவும், கோக்கும் ஆக்கிரமித்த வீட்டில் வழக்கொழிந்துப்போன பாரம்பரிய உணவுகள் கொரிக்கவும், பருகவும் கிடைக்கிறது.

இன்னும் என்னென்ன அதிசயங்கள் நடக்கப்போகிறதோ கரோனா லாக் அவுட்டால்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x