Published : 10 Aug 2015 10:41 AM
Last Updated : 10 Aug 2015 10:41 AM

உடுமலை அருகே குடி போதையில் ஒரு வயது குழந்தை அடித்துக் கொலை: தந்தையின் வெறிச் செயல்

உடுமலை அருகே, ஒரு வயதுக் குழந்தையைக் குடி போதையில் அடித்துக் கொன்றதாக அவரது தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறிய தாவது:

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (எ) நடராஜன்(27). இவரது மனைவி மலர்க்கொடி(20). இவர்களுக்கு ஒரு வயதில் ராஜ் என்ற மகன் இருந்தான். பிழைப்புக்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு, உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில் தங்கி, அங்குள்ள கோழிப் பண்ணையில் இவர்கள் இருவரும் வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊருக்குச் சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்குப் பின் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.

நடராஜனுக்கு குடிப் பழக்கம் இருந்ததாகவும் தெரிகிறது. இதனால், வீட்டுச் செலவுக்குப் பணம் தராததால், தம்பதியர் இடையே நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். அத்துடன் குழந்தையையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.

மனைவிக்கு காயம்

கணவன் தாக்கியதால் பலத்த காயமடைந்த மலர்க்கொடி, மயக்க நிலையில் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு உடுமலை பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் மலர்க் கொடியிடம் விசாரணை நடத்தினர். குழந்தையை உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு, குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மலர்க்கொடிக்கு தற்போது உடுமலை அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பம் குறித்து அமராவதி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, குழந்தையை அடித்துக் கொலை செய்ததாக நடராஜனைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x