Published : 11 Apr 2020 08:13 PM
Last Updated : 11 Apr 2020 08:13 PM

கரோனாவால் நாடு முழுவதும் விமானங்கள் ரத்து: முன்பதிவு டிக்கெட் பணத்தை திருப்பி தராத விமான நிறுவனங்கள்- வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் இ-டிக்கெட் முகவர்கள் 

கரோனாவால் நாடு முழுவதும் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் முன்பதிவு செய்த பணத்தை திருப்பி தராமல் விமான நிறுவனங்கள் புதிய நடைமுறையை அறிவித்துள்ளதால் பயணிகளுக்கு அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தில் இ-டிக்கெட் முகவர்கள் உள்ளனர்.

பொதுவாக விமானங்களை விமான நிறுவனங்களே ரத்து செய்தால் அந்தப் பணத்தை அந்நிறுவனங்கள், டிக்கெட் புக்கிங் செய்தவர்களுக்கு திரும்பி வழங்கும்.

அதுவே பயணிகள், டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை பிடித்தம் செய்து கொண்டு மீதி தொகையை வழங்கும். விமானங்களை பயணிகள் தவறவிட்டால் டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்பட மாட்டாது.

தற்போது ‘கரோனா’ வைரஸ் பரவலால் நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெளிநாடுகள், உள்நாட்டு நகரங்களுக்க செல்வதற்காக விமானங்களில் முன்கூட்டியே, பயணிகள் இ-டிக்கெட் முகவர்கள் வாயிலாக டிக்கெட் புக்கிங் செய்திருந்திருந்தனர்.

தற்போது விமான சேவை செய்யப்பட்டதால் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அந்த டிக்கெட்டுக்குரிய தொகை திருப்பி வழங்க வேண்டும் அல்லது குறைந்தப்பட்சம் அந்த தொகைக்கான வவுச்சர் கொடுத்த அடுத்து விமான சேவை தொடங்கும்போது அந்த தொகையில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

ஆனால், விமான நிறுவனங்கள் தற்போது புதிதாக ஒரு கொள்கையை ஏற்படுத்தி இருப்பது, டிக்கெட் புக்கிங் செய்த இ-டிக்கெட் முகவர்களுக்கும், அவர்கள் மூலம் விமான டிக்கெட் எடுத்த பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இ டிக்கெட் முகவர்கள் நலச்சங்க மாநில செய்தி தொடர்பு அலுவலர் ஏ.சாஹிர் உசேன் கூறியதாவது:

கிரெடிட் ஷெல் ஆஃப்ஷன் (CREDIT SHELL OPTION) என்ற புதிய நடைமுறைய கொண்டு வந்தள்ளனர். இந்த புதிய கொள்கையின்படி எக்காரணம் கொண்டும் முன்பதிவு செய்த பணம் திரும்ப தர மாட்டாது என்றும், யார் பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்து ரத்து செய்ய பட்டதோ அவர் அந்த தடத்தில் அவர் மட்டுமே ஒரு வருடத்திற்குள் (28.02.2021)பயணம் செய்ய முடியும் என்றும் கூறியுள்னளர்.

மேலும், இந்த புதிய நடைமுறையால் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவருக்கு கூட அந்த விமான டிக்கெட்டை பயனளிக்கும் வகையில் மாற்றம் செய்ய முடியாது.

தேதி மாற்றத்தின் போது (Re-Schedule) ஏற்படும் அன்றைய நிலவரப்படி ஏற்படும் வித்தியாச தொகையையும் கூடுதலாக செலுத்த வேண்டும். அதனால், டிக்கெட் புக்கிங் செய்த பொதுமக்கள் பணத்தை திருப்பி கெட்டு எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

ஏற்கெனவே விமான சேவை ரத்தால் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். தற்போது அடுத்து விமான சேவை தொடங்கினாலும் எங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழலுக்கு விமானநிறுவனங்கள் புதிய நடைமுறையை அறிவித்துள்ளனர்.

இதற்கு தீர்வாக உடனடியாக எவ்வித காரணமும் இன்றி முன்பதிவு செய்த தொகையை திருப்பி தர வேண்டும். இல்லை எனில் அதற்குரிய ரத்து செய்த தொகையை எளிதாக பயன்படுத்தும் வகையில் PROMO CODE (OR) COUPON ஆக வழங்கி அதே தொகையின் மதிப்பில் வேறு பயனாருக்கு திரும்ப பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். இதற்கு எவ்வித கால நிர்ணயமும் செய்ய கூடாது. PROMO CODE OR COUPON மூலமாக போட கூடிய டிக்கெட்களுக்கு வேறு விலை நிர்ணயம் செய்ய கூடாது. பயணிகள் பாதிக்கப்படம் வகையில் கொண்டுவரப்பட்ட Ctedit Shell Option முறையை உடனே நிறுத்த வேண்டும்.

இந்த புதிய கொள்கையை ரத்து செய்ய மத்திய அரசும் மற்றும் விமான அமைச்சகம் வழிவகை செய்ய வேண்டும். இல்லை என்றால் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு பணம் திருப்பி தருவது இடிக்கெட் ஏஜெண்ட்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக ஆகிவிடும்.

இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x