Published : 11 Apr 2020 05:49 PM
Last Updated : 11 Apr 2020 05:49 PM

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை: முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் 

ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்ததின் அடிப்படையில், பிரதமருடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சரவைக் கூட்டம் தற்போது முதல்வர் பழனிசாமி தலைமையில் கூடியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று நடவடிக்கையாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலாளர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இது தவிர நச்சுயிரியல் துறை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள தனியார் மற்றும் அரசுத் துறை சார்ந்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டு, அந்தக் குழு ஆய்வு நடத்தி அறிக்கை தர உத்தரவிடப்பட்டது.

19 பேர் கொண்ட இந்த நிபுணர் குழு நேற்று முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது. அப்போது நிபுணர் குழு ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப் பரிந்துரைத்தது. நேற்று முன் தினம் 12 கண்காணிப்புக் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில் பேட்டி அளித்த முதல்வர், கரோனா தொற்று மூன்றாம் நிலை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை பிரதமருடன் முதல்வர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் ஊரடங்கை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.

தற்போது நடக்கும் கூட்டத்தில், மேற்கண்ட நிலையைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பதற்கான முடிவை அமைச்சரவை எடுக்கும் எனவும், அதையொட்டி நிவாரண உதவிகள் குறித்தும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x