Published : 11 Apr 2020 05:42 PM
Last Updated : 11 Apr 2020 05:42 PM

ரூ.500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் பாக்கெட்டை ரூ.250க்கு அனைவருக்கும் வழங்க வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

நியாய விலைக்கடையில் மளிகைப் பொருட்களின் தொகுப்பு ரூபாய் 500க்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலையை ரூபாய் 250 ஆக குறைத்து இதே அளவு பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கிட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், ஊரடங்கை மீறியவர்களிடம் பறிமுதல் செய்த வாகனங்களை உரிமையாளர்களிடம் திரும்ப வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:

''தமிழகத்தில் கரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்தியாவிலேயே அதிகம் பேர் பாதித்த மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. கரோனா பரவலின் இரண்டாவது கட்டத்தில் இருந்து மூன்றாவது கட்டத்திற்குப் போவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஏற்கெனவே தெரிவித்துள்ளீர்கள்.

இந்த நிலையில் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும், ஊரடங்கு உத்தரவின் விளைவாக பாதிப்புக்குள்ளாகி கடும் நெருக்கடியில் இருக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி பாதுகாத்திட அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

* ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற நிலையில் அடுத்த பதினைந்து நாட்கள் சாதாரண ஏழை எளிய மக்கள் உயிர் வாழ்வதற்கு இரண்டாம் கட்ட நிவாரண நிதியை, உணவுப் பொருட்களை மத்திய, மாநில அரசுகள் வழங்கிட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து குறைந்தபட்சம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 5000 தொகையும், குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு 35 கிலோ அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கிட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் தரமானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அட்டை இல்லாதவர்கள், சர்க்கரை அட்டை உள்ளவர்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இந்த நிவாரணம் கிடைக்க உரிய அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

* ஏற்கெனவே நியாய விலைக்கடையில் மளிகைப் பொருட்களின் தொகுப்பு ரூபாய் 500க்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலையை ரூபாய் 250 ஆக குறைத்து இதே அளவு பொருட்கள் கொண்ட தொகுப்பினை வழங்கிட வேண்டும்.

* அனைத்து நலவாரிய உறுப்பினர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்குவது என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மொத்த நலவாரிய உறுப்பினர்களுள் மிகவும் குறைந்த எண்ணிக்கையினருக்கே இது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நலவாரியங்களிலும் மார்ச் 31 வரை பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை 72,97,446 ஆகும். இவர்கள் அனைவருக்கும் அரசு அறிவித்துள்ள தலா ரூபாய் 1000 மற்றும் உணவுப் பொருட்கள் கூடுதலாக வழங்கிட வேண்டும்.

* தமிழகத்தில் ஒரு பகுதி உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. சில உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தேர்தல் நடைபெற்ற உள்ளாட்சிகளுக்கும், நடைபெறாத உள்ளாட்சிகளுக்கும் கரோனா பாதிப்பு வந்ததிலிருந்து நிதி ஏதும் வழங்கப்படவில்லை.

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் கரோனா பாதிப்புக்கான சுகாதாரப் பணிகளையும் மேற்கொள்ள இயலவில்லை என உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவசரமாக நிதியினை ஒதுக்கித் தர வேண்டும்.

* கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மட்டும் இரண்டு நாள் கூடுதல் கூலி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மார்ச் மாதத்தில் மிகச் சொற்ப அளவிலேயே பணிகள் நடந்துள்ளன. எனவே கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை அட்டை வழங்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தலா 10 நாள் கூலியை நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்.

* தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினை மீறியதாக சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், அவர்களது வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ள சூழலில் ஒரு மாதத்திற்கு மேல் அந்த வாகனங்களை காவல் நிலையத்தில் நிறுத்தி வைப்பதன் மூலம் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஊரடங்கு உத்தரவை மீறியவர்களை எச்சரித்து விடுவது என்கிற அடிப்படையில் அவர்களிடமிருந்து எழுத்துபூர்வமான உறுதிமொழியினை பெற்றுக் கொண்டு அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களது வாகனங்களையும் திருப்பி அளிக்க வேண்டும்.

* ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது சில இடங்களில் காவல்துறையின் கடும் அத்துமீறல்கள் நடப்பதான செய்திகள் கவலை அளிக்கின்றன. மனித உரிமை மீறல்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

* கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு மருத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு செய்வதாக அரசு கூறியிருப்பதை போலவே, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் அந்தந்த நிர்வாகம் காப்பீடு வழங்க முன்வருவதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு மட்டுமல்லாமல் நோயாளிகளோடு நெருக்கமாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கும் காப்பீட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மேற்கூறிய அம்சங்களையும் இன்று மாலை நடக்கவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x