விவசாயிகளை ஊக்கப்படுத்த டிராக்டர் மூலம் இலவச உழவு: 1,500 ஏக்கர் இலக்கு

விவசாயிகளை ஊக்கப்படுத்த டிராக்டர் மூலம் இலவச உழவு: 1,500 ஏக்கர் இலக்கு

Published on

தேசிய ஊரடங்கு உத்தரவால் வேளாண் பணிகளில் தொய்வு ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் விருதுநகர் மாவட்டத்தில் டாஃபே நிறுவனம் மூலம் இலவச உழவு செய்யப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் எக்டேரில் வேளாண் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வேளாண் சாகுபடி பணிகளும் முடங்கியுள்ளன. உணவு உற்பத்தி குறைவதை தடுக்கும் வகையிலும் வேளாண் பணிகள் தடையின்றி நடக்கவும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான டாஃபே நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக இந்நிறுவனம் "J FARM " செல்போன் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலம் இந்த இலவச உழவு சேவையை விவசாயிகள் பெற முடியும்.

இலவச உழவு திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் 5 டிராக்டர்கள் மூலம் உழவுப் பணி தொடங்கப்பட்டது.

இதுகுறித்து இத்திட்டத்தின் மக்கள் தொடர்பு பிரதிநிதியான கிருஷ்ணகுமார் கூறுகையில், ஊரடங்கு காலத்தில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் உழவுப் பணிகள் பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக விவசாயிகளுக்கு இலவசமாக அவர்களது நிலத்திற்கே சென்று உழவு மேற்கொண்டு வருகிறோம்.

நந்திகுண்டு, மேலதுலுக்கன் குளம், கீழதுலுக்கன்குளம், அழகியநல்லூர், மாந்தோப்பு, பிசின்டி, அச்சங்குளம் போன்ற பகுதிகளில் இலவச உழவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக எவ்வித கட்டணமும் விவசாயிகளிடமிருந்து பெறுவதில்லை.

டிராக்டர்களுக்கான வாடகை மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம் அனைத்தும் டாஃபே நிறுவனமே வழங்குகிறது. இந்த உதவி தேவைப்படும் சிறு குறு விவசாயிகள் குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அல்லது 1800 4200 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். ‌ஜூன் 30ம் தேதி வரை இச்சேவை வழங்கப்படும். ஏப்ரல் மாதத்தில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 1,500 ஏக்கர் உழவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in