Last Updated : 11 Apr, 2020 11:18 AM

 

Published : 11 Apr 2020 11:18 AM
Last Updated : 11 Apr 2020 11:18 AM

ஏப்.15 முதல் சர்க்கரை ஆலை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்  செயல்படும்: கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை ஆகியவை ஏப்ரல் 15-ம் தேதி முதல் வழக்கம்போல் செயல்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கரோனா நச்சுயிரித் தாக்குதலிலிருந்து பொதுமக்களைக் காக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நடப்பதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மணிலா, உளுந்து, நவரைப் பருவ நெல் ஆகியவற்றுக்கான அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த விளைபொருட்களை விவசாயிகள் உரிய காலத்தில் விற்பனை செய்ய வசதியாக கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனைத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் விவசாயிகளின் நலன் கருதி ஏப்ரல் 15-ம் தேதி முதல் வழக்கம் போல செயல்படத் தொடங்கும்.

விவசாயிகள் சமூக நலன் கருதி தங்களது விளைபொருட்களை விற்பனைசெய்ய வரும்போது அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் வணிகம் மேற்கொண்டு பயன்பெறலாம். மேலும், நெல்லிக்குப்பத்திலுள்ள ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ஏப்ரல் 15-ம் தேதி முதல் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கரும்பு விவசாயிகள் கரும்பு வெட்டும்போதும், அதனை ஆலைக்கு எடுத்து வரும்போதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சர்க்கரை ஆலையினர் மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளித்து பயன்பெறவும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x