

புதுச்சேரியில் கரோனாவுக்கு முதல் பலி நிகழ்ந்துள்ளது. கேரளம் அருகேயுள்ள மாஹே பிராந்தியத்தில் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மரணமடைந்தார்.
புதுச்சேரியில் மாஹே பிராந்தியத்தில் முதலில் வெளிநாடு சென்று திரும்பிய மூதாட்டி கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்து வீடு திரும்பினார். எனினும், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சூழலில், புதுச்சேரியில் டெல்லி சென்று வந்த 3 பேருக்கும் அதில் ஓருவரின் மனைவி என புதுச்சேரியில் 4-பேருக்கு கரோனா தொற்று முதலில் உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியாங்குப்பம், திருவாண்டார்கோயிலில் கரோனா பாதிக்கப்பட்டோர் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, டெல்லி சென்று திரும்பிய மூலக்குளம் மற்றும் திருவாண்டார்கோயில் பகுதிகளை சேர்ந்த இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சையில் உள்ளனர்.
மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசமான மாஹேவை சேர்ந்த 71 வயதுடைய ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று (ஏப்.11) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது, புதுச்சேரியில் டெல்லி சென்று வந்த 5 பேர், அதில் ஒருவரின் மனைவி உட்பட ஆறு பேர் சிகிச்சையில் உள்ளனர்.