Last Updated : 10 Apr, 2020 12:17 PM

 

Published : 10 Apr 2020 12:17 PM
Last Updated : 10 Apr 2020 12:17 PM

தஞ்சாவூரில் அம்மா உணவகத்தில் நாள்தோறும் 2,000 பேருக்கு இலவச உணவு

தஞ்சாவூரில் மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் இரு அம்மா உணவகங்களில் வியாழக்கிழமை முதல் நாள்தோறும் 2,000 பேருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்கள் தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களான காய்கனி கடைகள், மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள் மட்டும் பிற்பகல் 1 மணி வரை திறக்கப்படுகின்றன.

இந்நிலையில், தஞ்சாவூர் மாநகரில் திலகர் திடல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள இரு அம்மா உணவகங்களில் ஆதரவற்றோர், பிச்சைக்காரர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு வழக்கமான விலையில் உணவு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அம்மா உணவகங்களில் அனைவருக்கும் இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. வழக்கமாக காலை இட்லி, மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், இரவு இட்லி ஆகியவை சுமார் 500 பேருக்கு வழங்கப்பட்டு வந்தன.

தற்போது காலையில் இட்லி, மதியம் வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், புளி சாதம் என ஒவ்வொரு நாளும் ஒரு கலவை சாதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் சப்பாத்தி, ஊத்தப்பம் போன்றவை வழங்கப்படுகின்றன.

திலகர் திடலில் உள்ள அம்மா உணவகத்தில் மளிகைக் கடை, காய்கறிக் கடைகளில் வேலை செய்பவர்கள், மாநகராட்சித் தொழிலாளர்கள் என பலரும் சாப்பிட்டு வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை (நேற்று) முதல் நாள்தோறும் 2,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

இதற்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள் இரு மாதங்களுக்குப் போதுமான அளவு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x