Last Updated : 10 Apr, 2020 11:02 AM

 

Published : 10 Apr 2020 11:02 AM
Last Updated : 10 Apr 2020 11:02 AM

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி: உதவிக்கரம் நீட்டிய தொழிலதிபர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரில் ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஊரடங்கால் வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டு நிற்கும் இவர்களுக்கு வேதாரண்யத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் எஸ்.எஸ்.தென்னரசு நிவாரண உதவிகளை வழங்கினார்.

21 நாள் ஊரடங்கின் விளைவாக அடிமட்டத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். நல வாரியம் சார்பில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டாலும் பெரும்பாலான தொழிலாளர்கள், நல வாரியத்தில் பதிவு செய்யாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம் நகரிலும் அத்தகைய தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் நகரில் உள்ள கடைகளில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமார் ஐம்பது பேர் பிழைப்புக்கு வழியின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இதை அறிந்த அந்த ஊரைச் சேர்ந்த தொழிலதிபர் எஸ்.எஸ். தென்னரசு தனது சொந்தப் பணத்தில் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

வணிகர் சங்கம் ஒன்றின் மாநில துணைத்தலைவரான இவர், 37 சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கும், அவர்களோடு சேர்த்து 10 சுமை ஏற்றும் தட்டு ரிக்‌ஷா தொழிலாளர்களுக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் அன்றாடத் தேவையான அரிசி. பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் தொகுப்பை வழங்கினார். இந்தத் தொகுப்பை தொழிலாளர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைத்தார் தென்னரசு.

தாங்கள் எதிர்பாராத தருணத்தில் இப்படியொரு ஆதரவுக் கரம் நீண்டு வந்து உதவியதை கண்டு அந்தத் தொழிலாளர்கள் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் நெகிழ்ந்துபோனார்கள். பள்ளிகள் மற்றும் கிராமத்தினருக்குத் தேவையான உதவிகளையும் தென்னரசு அவ்வப்போது செய்துவருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x