Last Updated : 09 Apr, 2020 07:07 PM

 

Published : 09 Apr 2020 07:07 PM
Last Updated : 09 Apr 2020 07:07 PM

குமரியில் கரோனா சமூக பரவலைத் தடுக்க நடவடிக்கை: 40 ஆயிரம் வீடுகளில் மருத்துவ சோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா சமூக பரவல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 40 ஆயிரம் வீடுகளில் வசிப்போரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று ஏற்படாத வகையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, போலீஸார், உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றர்.

நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கரங்கல், தக்கலை பகுதிகளில் ஆய்வு செய்து 1 டன்னிற்கு மேல் கெட்டுப்போன மீன்களை கைப்பற்றி அவற்றை அழித்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் ஊரடங்கை மீறியதாக 209 பேர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 170 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2920 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2328 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை போலீஸார் கண்டிப்புடன் கண்காணித்து வருகின்றனர். கடந்த இரு தினங்களாக நகர பகுதிகள் மட்டுமின்றி ஒவ்வொரு கிராமங்களிலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீஸார் பலமுறை ரோந்து சுற்றி வருகின்றனர்.

அங்கு சிறுவர்கள் ஒன்றுகூடி விளையாடினாலோ, இளைஞர்கள், மற்றும் பெண்கள் கூட்டம் போட்டு பேசிகொண்டிருந்தாலோ அவர்களை கண்டித்து வீடுகளுக்கு செல்லுமாறு எச்சரித்து அனுப்புகின்றனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த வீடுகளில் 20 நாட்களுக்கு மேல் ஆன வீடுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போது 5 ஆயிரம் வீடுகள் வரை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா சமூக பரவல் ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கரோனா வைரஸ் சமூக பரவல் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் வசித்த பகுதி, மற்றும் வெளிநாட்டினர் வசித்த நகர, கிராம பகுதிகள், உறவினர்கள் என 40 ஆயிரம் வீடுகளில் வசிப்போரிடம் கரோனா தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான நடைமுறை 4 நாட்களுக்குள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x