Published : 09 Apr 2020 06:07 PM
Last Updated : 09 Apr 2020 06:07 PM

குடும்ப அட்டை இல்லாத ஏழை மக்களுக்கும் ரேஷன் பொருட்கள்: ஒரு வாரத்தில் அறிக்கை; உயர் நீதிமன்றத்தில் அரசு பதில்

தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இல்லாத கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரேஷன் பொருட்களை வழங்கக் கோரிய வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை அளிப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமானத் தொழிலாளர்கள், தினக்கூலிகள், வெளி மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தமிழகத்தில் குடும்ப அட்டைகள் இருக்காது என்பதால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில், உணவு தானியங்களை விநியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அருள் அரசு என்பவர் உயர் நீ்திமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளித்தார், “குடும்ப அட்டை இல்லாத அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கியுள்ளது” என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்

அரசு அறிக்கையில் உள்ளபடி யாருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், அனைத்துப் பொருள்களும் வழங்கிய பிறகு ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கச் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x