விவசாயிகளுக்கு 90 நாட்களுக்கு வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள்: தமிழக அரசு, டாபே நிறுவனம் இணைந்து ஏற்பாடு

விவசாயிகளுக்கு 90 நாட்களுக்கு வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள்: தமிழக அரசு, டாபே நிறுவனம் இணைந்து ஏற்பாடு
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி 90 நாட்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி விவசாயப் பொருள்கள் கொள்முதல், விதை மற்றும் உர விற்பனை நிலையங்கள் இயங்குதல், விவசாய இயந்திரங்களின் புழக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு மற்றும் டாபே நிறுவனத்தின் ஜெ பாா்ம் ஆகியவை இணைந்து டிராக்டா்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அனைத்து விதமான விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக 90 நாட்களுக்கு வாடகையின்றி இலவசமாக உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் உள்ள வேளாண் இயந்திர வாடகை சேவையின் மூலம் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் மற்றும் தேவைப்படும் தேதி, நேரம் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், டாபே நிறுவனத்தின் ஜெ பாா்ம் சேவை மையத்தை 18004200100 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்யலாம்.

இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in