Published : 09 Apr 2020 02:13 PM
Last Updated : 09 Apr 2020 02:13 PM

738 பேருக்கு கரோனா தொற்று; எந்தத் தொடர்பால் பரவியது?- நெட்டிசன் கேள்விக்கு எச்.ராஜா பதில்

தமிழகத்தில் கரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை விவரங்கள் குறித்த கேள்விக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் கரோனா தொற்று இருப்பவர்கள் பலருமே டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது உறுதியானது.

இதனை வைத்து பலரும் மதரீதியான கருத்துகளை வெளியிட்டனர். இதைக் கட்டுப்படுத்த இனிமேல் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், ஒரு இடத்திலிருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிட்டு வருகிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, பதிலளித்து வருகிறார் எச்.ராஜா. இவர், சில சமயங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவிப்பதும், அது இணையவாசிகள் மத்தியில் விவாதப் பொருளாகிவிடுவதும் வழக்கம்.

தற்போது, "ராஜா சார், இந்தக் கேள்வியைக் கேட்க சரியான நபர் நீங்கள் தான். 6095 பேரில் 738 பேர். இதில் பாதி அந்த ஒரு இடத்திலிருந்து வந்தவர்கள். மாநிலத்தில் இருக்கும் மற்ற மக்களின் நிலை என்ன?” என்று நெட்டிசன் ஒருவர் எச்.ராஜாவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்

அவருக்கும் பதிலளிக்கும் விதமாக எச்.ராஜா, "738-ல், 678 பேர் அந்த ஒரு இடத்தைச் சேர்ந்தவர்கள். மீதியிருக்கும் 60 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், அல்லது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் வட்டத்தைச் சேர்ந்தவர்கள். வெளிநாட்டுத் தொடர்பில்லாத யாருக்கும் இதுவரை தொற்று ஏற்படவில்லை. அப்படி ஒருவர் கண்டறியப்பட்டாலும் அது ஆபத்து. அதுதான் 3-வது கட்டம் என்று அழைக்கப்படும்” என்று பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x