மலேசியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

ஊரடங்கினால் மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசும் மாநில அரசும் ஒரு வாரத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனோ நோய் பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளும் பல நாடுகளுக்கிடையே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்ற 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஊரடங்கினால், நீண்ட நாட்களாக அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் சென்ற பலரின் விசா காலம் முடிவடைந்த நிலையில் தங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி மலேசியத் தூதரகத்திற்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊரடங்கினால் இந்தியா திரும்ப முடியாமல் இருப்பது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும், உடனடியாக மத்திய, மாநில அரசுகள் கால தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து இந்தியா திரும்ப வழிவகை செய்ய உத்தரவிடக் கோரியும் மலேசியாவில் சிக்கியுள்ள முல்லைநாதன் சார்பில் வழக்கறிஞர் ஞானசேகர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று (ஏப்.9) நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அவர்களை இந்தியாவுக்குத் திரும்பி வருவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in