

ஊரடங்கு உத்தரவை மீறி தொற்று நோயை பரப்பும் நோக்கத்துடன் வெளியில் திரிந்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற நேரிடும் என சார்பு நீதிபதி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி சிறையில் இருந்த 57 கைதிகள் ஜாமீனில் அனுப்பப்பட்டுள்ளனர். சிறையில் கூட்டத்தை குறைக்கவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்கிறார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து வாகனங்களை உடனடியாகப் பெற முடியாது. ஊரடங்கு விலக்கப்பட்டு, சாதாரண நிலைக்கு திரும்பிய பிறகு தான் நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றி வாகனங்களை எடுக்க முடியும்.
ஊரடங்கு உத்தரவை மீறி, தொற்று நோயை பரப்பும் நோக்குடன் வெளியில் செல்லுதல், பேரிடர் ஏற்படுத்துதல், சுகாதாரத்தை கடைபிடிக்காமை ஆகிய குற்றங்களுக்காக 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை பெற நேரிடும். இவ்வாறு சார்பு நீதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான அறிவொளி உடனிருந்தார்.