Published : 09 Apr 2020 07:57 AM
Last Updated : 09 Apr 2020 07:57 AM

கரோனா விழிப்புணர்வு தரும் பாடங்கள்

ராஜ் பி சிங்

வாரக்கணக்கில் இப்படி குடும்பத்தோடு அடைபட்டுக் கிடப்போம் என்று ஒரு மாத காலத்துக்கு முன்னால் நம் நாட்டில் ஓரிருவர்கூட நினைத்திருக்க மாட்டார்கள்; எத்தனை பேருக்கு எத்தனை விதமான இடர்ப்பாடுகள். ஒரு நோய்த் தொற்றுக்கு எதிராக உலக வரலாற்றிலேயே இருந்திராத வகையில் ஒருமுகமாக எதிர்த்து நிற்கிறோம்.

நோய்க் கிருமிக்கு எதிராக உலகமே தன்னிடம் உள்ள நிதியாதாரத்தைக் கொண்டும், மருத்துவஉத்திகளை ஒருங்கிணைத்தும் போராடிக் கொண்டிருக்கிறது. கரோனா வைரஸ் கிருமிகளால்15 லட்சத்துக்கும் மேற்பட்டோர்பீடிக்கப்பட்டுள்ளனர், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பெரியம்மை, இளம்பிள்ளைவாதம் என்ற இரு பெரிய வைரஸ்களை நமது பொது சுகாதார அமைப்பு கிட்டத்தட்ட ஒழித்தேவிட்டது. இப்போது நம் நோக்கம் கரோனா வைரஸை ஒழிப்பது அல்ல; மேற்கொண்டு பரவாமல் கட்டுப்படுத்துவது மட்டுமே. இதுதொற்றிவிட்டது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறி எதுவும் இல்லாமலே மனிதர்கள் இடையேஎளிதாகப் பரவிக் கொண்டிருக் கிறது. இதனால் இதை ஒழிப்பதுகூட அல்ல, கட்டுப்படுத்துவதே பெரிய சவாலாக இருக்கிறது.

அதே சமயம் இதன் பரவல்வேகத்தை நம்மால் கட்டுப்படுத்தி விட முடியும். அந்த கால இடைவெளிக்குள் நமது பொது சுகாதார அமைப்பை இதற்கு எதிரான போருக்குத் தயார் செய்ய முடியும். ஊரடங்கை தளர்த்தி, மக்கள் அனைவரும் வேலைக்குத் திரும்பலாம், வெளியூர் செல்லலாம் என்று அனுமதித்தால் லட்சக்கணக்கானவர்களின் வெளியேற்றத்தால் கோடிக்கணக்கானவர்களுக்கு இந்நோய் பரவக்கூடும்.

அப்படியென்றால் எதிர்காலம் நிச்சயமற்றதாகவும், சர்வ நாசமாகவும் இருந்துவிடும் என்பதல்ல. இந்தியாவில் ஊரடங்குஉத்தரவுகள் மூலம் மக்களைவீட்டுக்குள்ளேயே கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் பரவும் வேகத்தை கணிசமாக கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

தனியாக இருப்பது, வாயில் துணி கட்டிக்கொண்டு காற்றில் பரவும் நுண்கிருமிகளைத் தடுப்பது,அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதல் மூலம் கைகளில் தொற்றிய நோய்க் கிருமிகளைக் கொல்வது,அடுத்தவரை நெருங்காமல் சுமார்மூன்றரை அடி இடைவெளி விடுவது ஆகியவற்றால் காசநோய் கிருமிகளையும் நம்மை அறியாமல் பரவாமல் தடுத்து வருகிறோம்.

நீண்ட காலத்துக்கு நல்லது

இந்த ஊரடங்கு, சமூக இடைவெளி நடவடிக்கைகளால் பொது சுகாதாரத்துக்கு நீண்டகாலப் பலன்கள் கிடைக்கும். தினமும் குளிக்க வேண்டும். வெளியில் போய்விட்டு வந்தால், கை, கால்,முகம் ஆகியவற்றை நன்கு சோப்புபோட்டு கழுவ வேண்டும். கழிப்பறைக்குச் சென்று வந்தால் கை-கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களில் நோய்க் கிருமிகள் எளிதில் பரவும் என்பதால் இருமும்போதும், தும்மும்போதும் நீர்த்துளிகள் அடுத்தவர் மீது படாதிருக்க வாயையும், மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. என்பதுபோன்ற பொது ஒழுங்குகள் எல்லாம் மக்கள் மனதில் ஆழப் பதிந்திருக்கும்.

கரோனா வைரஸ் புதிய ஆபத்தாக தெரிகிறது. அதுபற்றிய பலவிஷயங்கள் மர்மமாகவே இருக்கின்றன. அடுத்து கரோனா வைரஸ் நம்மைத்தான் தாக்கப் போகிறது என்று அனைவருமே அஞ்சுகிறோம். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், உயிரிழப்புகளுக்காகவும், எடுத்த- எடுக்கத் தவறிய நடவடிக்கைகளுக்காகவும் கடும் விமர்சனங்களில் இருந்து எந்த நாடும் தப்பவே முடியாது.

நாமும் நிறைய பாடம் கற்றுக்கொண்டு வருகிறோம். இந்த பாடங்கள் நமக்கு பயன்பட்டதா? அவற்றால் நாம் பயன் அடைந்தோமா? இதற்கு காலம்தான் விடை கூற முடியும்!

கட்டுரையாளர்:அப்போலோ மருத்துவமனை சுவாச நோய் பிரிவு ஆலோசகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x