Published : 08 Apr 2020 07:10 PM
Last Updated : 08 Apr 2020 07:10 PM

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 738; பலி 8 ஆக அதிகரிப்பு - பீலா ராஜேஷ் பேட்டி 

தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொற்று எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆனது.

கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தினமும் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அறிவிக்கிறார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:

“ தமிழகத்தில் கரோனா நடவடிக்கையில் இதுவரை வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 60,739 பேர்.

* எங்களது கண்காணிப்பில் உள்ளவர்கள் 230 பேர்.

* மொத்தம் உள்ள ஆய்வகங்கள் எண்ணிக்கை 19.

* 28 நாள் கண்காணிப்பை முடித்தவர்கள் எண்ணிக்கை 32,075.

* மொத்தம் இதுவரை ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 6,095.

* நேற்று வரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 690.

* இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 48.

* இன்று வரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம் 738 பேர்.

* இதில் 32 பேருக்கும் ஒரே தொற்று. 8 பேர் ஒரே குழுவாகப் பயணித்தவர்கள். மீதியுள்ள 6 பேரில் 2 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்ததலில் இருந்தவர்கள். 4 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அவர்களது பயண விவரத்தைத் தேடுகிறோம்.

* ஒரே தொற்று உள்ளவர்களாகக் கண்டறியப்பட்டவர்களில் 679 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டினர் 7 பேர். அவர்களுடன் தொடர்பில் இருந்ததில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 14 பேர்.

* ஒரே குழுவாகப் பயணித்தவர்கள் 553. அவர்களுடன் தொற்று தொடர்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 105 பேர். டெஸ்ட் அனுப்பப்பட்டதில் 344 பேரின் மாதிரிகள் ஆய்வில் உள்ளன.

* கண்காணிப்பு நடவடிக்கைகள் 34 மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கை 15 லட்சத்து 66 ஆயிரத்து 448.

* கண்காணிப்பு நடவடிக்கையில் அணுகிய மக்கள் 53 லட்சத்து 67 ஆயிரத்து 238. ஆய்வில் ஈடுபட்ட களப்பணியாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 668.

* 5 பேர் சற்று உடல் நிலை பாதித்த நிலையில் உள்ளனர்.

* 9 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

* இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

* அதிக பாதிப்புள்ளவர்கள், நேரடியாகத் தொற்றுள்ளவர்களை உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்துவோம். மறைமுகத் தொடர்பில் இருந்தவர்களை வீட்டுக்கண்காணிப்பில் இருக்கச் சொல்வோம். தொற்று அறிகுறி வந்தால் உடனடியாக அழைத்து வந்து டெஸ்ட் எடுப்போம்.

* சில ஆய்வகங்கள் புதிதாக ஆரம்பித்துள்ளன. அதனால் சற்று தாமதமாக இருக்கலாம். கிங்ஸ் ஆய்வகம், சென்னை மருத்துவக்கல்லூரி ஆகியவை வேகமாக இயங்குகின்றன.

* சிகிச்சைக்காக தனியாக நிபுணர் குழு உள்ளது. இது தவிர மத்திய அரசிலிருந்து அவர்கள் ஒரு நிபுணர் கமிட்டி வைத்து அவர்கள் தனியாக வழிகாட்டுதல் தருகிறார்கள். மரணம் குறித்து நிபுணர்குழு ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

* மருத்துவக் கல்வி இயக்ககம் மூலம் நிபுணர் குழுவை ஆய்வு நடத்தக் கேட்டுக்கொண்டு அதன் மூலம் நிபுணர் குழு ஆய்வு செய்து தனித்தனியாக நபர்களுக்கு அளிக்கும் சிகிச்சையிலும் மாற்றம் தேவை என்றாலும் அதையும் செய்கிறோம்.

* வேலூர் நபர் உயிரிழந்தது அவர் தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

* இரண்டாவது நிலையிலிருந்து மூன்றாவது கட்டத்துக்குச் செல்லும் நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் பாடுபடுகிறோம். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 21. வயதான நபர் (72) வெற்றிகரமாக நோயிலிருந்து மீண்டுள்ளார்.

* பிப்ரவரி மாதத்திலிருந்து தீவிர சுவாசத்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட 550 பேரின் மாதிரிகளையும் எடுத்து சோதித்துள்ளோம். அதில் 3 பேருக்கு தொற்று உறுதி உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை 4 மருத்துவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்”.

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x