குமரியில் கரோனா பாதித்தவரின் மனைவி, குழந்தைகள், மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல மறுப்பு: வீட்டை அதிகாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

குமரியில் கரோனா பாதித்தவரின் மனைவி, குழந்தைகள், மருத்துவப் பரிசோதனைக்கு செல்ல மறுப்பு: வீட்டை அதிகாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
Updated on
1 min read

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையில் கரோனாவில் பாதித்தவரின் மனைவி, குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் கரோனா பரிசோதனைக்கு செல்ல மறுத்தனர். இதனால் சுகாதாரத்துறையினர், மற்றும் போலீஸார் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சிவிளை யை சேர்ந்தவர் டெல்லி தப்லிக் மாநாட்டிற்கு சென்றுவிட்டு கடந்த 24ம் தேதி சொந்த ஊர் திரும்பினார்.

இவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை தொடர்ந்து வெள்ளாடிச்சிவிளை பகுதியில் இருந்து உள்ளூர் நபர்கள் வெளியே செல்லவும், வெளியூர் நபர்கள் ஊருக்குள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்ததால், அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கோள்ள சுகாதாரத் துறையினர் திட்டமிட்டனர்.

இதற்காக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார துறையினர், போலீசார் நேற்று வெள்ளாடிச்சிவிளையில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கரோனா பரிசோதனைக்கு செல்ல அக்குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். மேலும் வீட்டை பூட்டி கொண்டு வீட்டிற்குள் இருந்தனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் எவ்வளவோ பேசியும் அவர்கள் வீட்டைத் திறந்து வெளியே வராததால் அதிகாரிகள் வீட்டை வெளிப்புறமாக பூட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையே நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இறுதியில் அக்குடும்பத்தினர் மருத்துவமனைக்கு செல்லவும் பரிசோதனைக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.

இதைதொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. சுகாதாரத்துறையினர், மற்றும் போலீஸார் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in