Published : 08 Apr 2020 04:33 PM
Last Updated : 08 Apr 2020 04:33 PM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க; அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்திடுக: ஜி.கே.வாசன்

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்தது போல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிப்பு வெளியிட தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கை:

“தமிழக அரசு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சியளிக்க பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்ப் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் நிலவும் ஊரடங்கு, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போன்றவற்றால் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறாத நிலையும் ஏற்பட்டது. இதனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது வரவேற்கத்தக்கது. காரணம் வீட்டிலேயே இருந்தாலும் மாணவ, மாணவிகளுக்கு கரோனா பற்றிய அச்சத்தால் படிக்கின்ற மனமே இருக்காது. அப்படியே படித்தாலும் பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதக்கூடிய சூழலும் இல்லை.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நல்ல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்னும் தொடங்கப்படவில்லை. இருப்பினும் இன்னும் கரோனா வைரஸ் பரவல் நீடிப்பதால், ஊரடங்கும் இருப்பதால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது எளிதான காரியமல்ல.

மேலும், மாணவர்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களின் மனநிலையும் தேர்வு எழுதுவதற்கு ஏற்ப இல்லை. இதுபோன்ற ஒரு அசாதாரண சூழலில் மாணவர்களின் உடல்நலனையும் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக தமிழக அரசு கரோனா வைரஸ் பரவலால் மக்கள் அடைந்துள்ள சிரமத்தைக் குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது. எனவே 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்தது போல 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிப்பு வெளியிட தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்”.

இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x