Published : 08 Apr 2020 12:27 PM
Last Updated : 08 Apr 2020 12:27 PM

மனோரமாவின் மகன் பூபதி மருத்துவமனையில் அனுமதி: தூக்க மாத்திரை சாப்பிட்டதில் உடல் நலம் பாதிப்பு

மனோரமாவுடன் அவரது மகன் பூபதி.

நடிகை மனோரமாவின் மகன் பூபதி மது கிடைக்காததால் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா. பெண் நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு பாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி (64). அவரைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.

நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில் அவரை மதுப்பழக்கம் ஆட்கொண்டது. மனோரமாவின் மறைவுக்குப் பிறகு தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் பூபதி வசித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால் மது யாருக்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி இரவு பூபதிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. உறவினர்கள் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த மாம்பலம் போலீஸார் விசாரணை நடத்தினர். போலீஸார் நடத்திய விசாரணையில், பூபதி மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மது கிடைக்காததால் கடந்த 6-ம் தேதி இரவு தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளதும் அதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை. மது கிடைக்காமல் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த பூபதி, இரவு தூங்க வேண்டும் என்பதற்காக அதிக அளவு தூக்க மாத்திரை சாப்பிட்டு இருக்கலாம். அது உடல் நலத்தைப் பாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x