Published : 08 Apr 2020 06:52 AM
Last Updated : 08 Apr 2020 06:52 AM

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.79.75 கோடி நிதி சேர்ந்தது; கரோனா தடுப்பு பணிக்கு அனைவரும் சிறு தொகையை வழங்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.79.75 கோடி நன்கொடையாக சேர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் கரோனா தடுப்பு ந்டவடிக்கைகளுக்காக சிறு தொகையை வழங்கவேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய் தடுப்பு நிவாரணப் பணிகளுக்காக நிதியுதவி அளிக்கவேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று பலர் மனமுவந்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு பங்களிப்பு செய்துள்ளனர். சிறு துளி பெருவெள்ளம் என்ற முதுமொழிக்கேற்ப தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சிறு தொகையை வழங்கினாலே, இப்பேரிடர் நேரத்தில் ஏழை ஏளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்.

அத்தகைய நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(ஜி)யின் கீழ் 100 சதவீத வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் நிவாரணத்துக்கு அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படும்.

நன்கொடைகளை மின்னணு மூலம் முன்னுரிமைப்படி, வங்கி இணைய சேவை அல்லது கடன் அட்டை, பற்று அட்டையின் மூலமாக,‘‘fttps://ereceipt.tn.gov.in/cmprf.html’’ என்ற இணைதயதளம் வாயிலாக செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். எலக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இசிஎஸ்) வாயிலாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், தலைமைச் செயலக கிளையில் உள்ள 117201000000070 என்ற சேமிப்புக் கணக்கு எண்ணுக்கு அனுப்பலாம். இதற்கு ‘IOBA0001172’ எனற ஐஎப்எஸ்சி கோடு மற்றும் AAAGC0038F என்ற முதல்வர் பொது நிவாரண நிதிக்கான பான் எண்ணை பயன்படுத்த வேண்டும்.

உரிய ரசீது வழங்கப்படும்

மேலும், இசிஎஸ் மூலம் நிதி அனுப்புவோர், உரிய அலுவலக பற்றுச்சீட்டை பெற, பெயர், செலுத்தும் தொகை, வங்கி மற்றும் கிளை, செலுத்தப்பட்ட தேதி, நிதி அனுப்பியதற்கான எண், தங்கள் முழுமையான முகவரி, மின்னஞ்சல் விவரத்தை குறிப்பிட வேண்டும். வெளிநாடு வாழ் மக்களிடம் இருந்து நிவாரண நிதி வரவேற்கப்படுகிறது. அவர்கள் ‘IOBAINBB001 Indian Overseas Bank, Central Office,Chennai’ என்ற SWIFT Code-ஐ பின்பற்ற வேண்டும்.

மின்னணு மூலம் பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள், குறுக்கு கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலம், அரசு துணைச் செயலாளர் மற்றும் பொருளாளர், முதலமைச்சர் பொது நிவாரண நிதி,நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை-600009, தமிழ்நாடு, இந்தியா, மின்னஞ்சல் முகவரி‘dspaycell.findpt@tn.gov.in’ என்ற முகவரிக்கு அனுப்பலாம். அனைத்து நன்கொடைகளுக்கும் உரிய ரசீதுகள் அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதுவரை, ரூ.79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரத்து 424 நிவாரண நிதியாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக பெறப்பட்டுள்ளதாகவும், நிதி வழங்கியவர்களுக்கு முதல்வர் பழனிசாமி நன்றிதெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x