Published : 08 Aug 2015 04:38 PM
Last Updated : 08 Aug 2015 04:38 PM

அதிக விலையால் இழப்பு: சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசு தனியார் பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை நிர்ணயித்திருக்கிறது எனவே அரசுக்கு இழப்பு ஏர்படும் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தெலுங்கானாவில் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக போட்டி ஏல முறையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒரு யூனிட் ரூ. 5.17 என்ற விலையில் 200 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட இது ரூ. 1.84 குறைவு ஆகும்.

தமிழக அரசு கடைபிடித்து வரும் சூரிய ஒளி மின்சாரக் கொள்முதல் முறை மிகவும் தவறானது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அதைப் பொருட்படுத்தாத தமிழக அரசு தனியார் பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை நிர்ணயித்திருக்கிறது. அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் மின்சாரத்தையும், மேலும் 31 தனியார் நிறுவனங்களிடமிருந்து 436 மெகாவாட் மின்சாரத்தையும் ஒரு யூனிட் ரூ.07.01 என்ற விலையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

தெலுங்கானாவில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதில், ஒப்பந்த காலமான 25 ஆண்டுகளில் யூனிட்டுக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்படும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் இதுவரை 1084 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2722 மெகாவாட் அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. இந்த அளவு மின்சாரம் ரூ.07.01 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டால் தமிழகத்திற்கு சுமார் ரூ.34,254 கோடி இழப்பு ஏற்படும். தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கனவே பேரிழப்பை எதிர்கொள்ளும் நிலையில் இதையும் தாங்க முடியாது.

மத்தியப் பிரதேச மின்வாரியம் மொரிஷியஸ் நாட்டு நிறுவனத்திடம் ஒரு யூனிட் ரூ.05.05 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போதே தமிழ்நாடு மின்வாரியம் அதன் சூரியஒளி மின்சார கொள்முதல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக அரசு அதன் நிலையை இதுவரை மாற்றிக் கொள்ள வில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு அதிக செலவு ஆனது.

ஆனால், சூரிய ஒளி மின்திட்டங்கள் இப்போது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதன் உற்பத்திச் செலவு பெருமளவில் குறைந்து விட்டது. அதேபோல், சூரிய ஒளி மின்சாரத்தின் விலையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த யூனிட் 10 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைந்து விட்டது.

தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதில் தனியாருக்கு திட்டமிட்டே சலுகை காட்டுகிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்களைக் காட்ட முடியும்.

உதாரணமாக, ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.07.01 என்பது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்குப் பிறகு மின்னுற்பத்தி செய்யும் சூரிய ஒளி நிறுவனங்களிடம் ரூ.5.87 என்ற விலையில் தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும். ஆனால், இந்த சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழக அரசு நீட்டித்திருக்கிறது.

அதானி நிறுவனத்தின் நலன் கருதி மேலும் ஓராண்டு வரை இந்த கூடுதல் விலைச் சலுகையை நீட்டிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இவை அனைத்துக்கும் காரணம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கில் கையூட்டு பெறுவது தான்.

இந்தியாவிலேயே சூரிய ஒளி அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான். எனவே, போட்டி ஏல முறையில் சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தால் 5 ரூபாய்க்கும் குறைவான விலையில் மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன.

எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலையையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, இதுவரை கையெழுத்திடப்பட்ட சூரிய ஒளி மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு போட்டி ஏல முறையில் புதிய கொள்முதல் ஒப்பந்தங்களை செய்து கொள்ள அரசு முன்வர வேண்டும்.

என்று வலியுறுத்தியுள்ளார் ராமதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x