Published : 07 Apr 2020 07:25 PM
Last Updated : 07 Apr 2020 07:25 PM

சென்னையைச் சேர்ந்த 64 வயதுப் பெண் கரோனாவால் உயிரிழப்பு; தமிழகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு; பீலா ராஜேஷ்

பீலா ராஜேஷ்: கோப்புப்படம்

சென்னை

சென்னையைச் சேர்ந்த 64 வயதுப் பெண் ஒருவர் கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 7 பேர் உயிரிழப்பு

கடந்த மார்ச் 24-ம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய நபர் உயிரிழந்தார். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 51 வயது நபர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.

இதேபோல், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 53 வயதுடைய பெண்னும் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பிய கணவர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரிடம் இருந்து இந்தப் பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதேபோல், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். துபாயில் இருந்து வந்த ராமநாதபுரம் கீழக்கரையைச் சேர்ந்த 71 வயது முதியவர் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது உடலைப் பெற்றுக் கொண்ட உறவினர்கள் சொந்த ஊரான கீழக்கரைக்கு சென்று இறுதிச் சடங்கு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக 2 நாட்களுக்கு முன் வந்த ரத்த மாதிரிகள் பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், முதியவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்டோரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல், டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த 60 வயது முதியவருக்கு கரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால், கடந்த 1-ம் தேதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் உயிரிழந்தார்.

அதேபோல், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயதுப் பெண் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயதுப் பெண் கரோனா வைரஸால் இன்று (ஏப்.7) உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 64 வயதுப் பெண் அவர். ஏற்கெனவே அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் இருந்தது.

கரோனாவால் ஏற்படும் ஒவ்வொரு மரணம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரணங்களை கட்டுப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x