Published : 07 Apr 2020 06:41 PM
Last Updated : 07 Apr 2020 06:41 PM

கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான முழுக்கவச உடை குறைந்த விலையில் தயாரிப்பு: அரசு ஆர்டரை எதிர்நோக்கும் கோவில்பட்டி நிறுவனம்

கரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கான முழுக்கவச உடை தயாரிப்பு பணி கோவில்பட்டி அருகே உள்ள நிறுவனத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

உலக நாடுகளை கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், தொற்று நோயான கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது பரவிவிடும் என்பதால், முழுக்கவச உடை அணிய வேண்டிய அவசியம் உள்ளது.

தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், முழுக்கவச உடைகள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையே, கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் முழுக்கவச உடை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

நாள் ஒன்றுக்கு இங்கிருந்து சுமார் 1500 முழுக்கவச உடைகள் தயாரித்து பேக் செய்யப்படுகிறது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் உரிமையாளர் தி.சுந்தர் கூறும்போது, நாங்கள் இதற்கு முன்பு முகக்கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம். ஜிப்மர், பி.ஜி.ஐ., எய்ம்ஸ், சஞ்சய் காந்தி ஆகிய மத்திய அரசின் மருத்துவமனைகளுக்கும், தமிழகத்தில், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவனத்துக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வந்தோம். அரசுக்கு மட்டும் தான் பொருட்கள் வழங்கி வருகிறோம். இதில் தனியார் மருத்துவமனைகளுக்கு எதுவும் வழங்குவதில்லை.

கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின்னர் முழுக்கவச உடைகள் தயாரிக்கிறோம். இது முழுமையாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 90 ஜி.எஸ்.எம். நெய்யப்படாத துணி என்றழைக்கப்படும் ஸ்பன் துணியில் தான் தயாரிக்கிறோம்.

இந்த வகை துணி தண்ணீர் உறிஞ்சாது. இதனை அணியும் நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்படாது. இந்த வகை துணியை குவஹாத்தி, மும்பை, குஜராத் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஸ்பன் துணிகளை கொள்முதல் செய்கிறோம்.

இதுபோன்று தமிழகத்தில் யாரும் முழுக்கவச உடை தயாரிக்கவில்லை. கேரளாவில் ஸ்பன் துணியில் முழுக்கவச உடை தயாரிக்கப்படுகிறது. இந்த முழுக்கவச உடைகளின் தேவை அதிகரித்துள்ளதால் எங்களது ஊழியர்கள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

கேரளா, ஆந்திர மாநில அரசுகள் எங்களிடமிருந்து இதனை தயாரித்து வழங்கி வருகிறோம். எங்களது நோக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவது தான்.

ஆனால், இதுவரை தமிழக அரசு எங்களை தயாரிப்பை வாங்க முன்வரவில்லை. எங்களுக்கு அனுமதி வழங்கினால் அரசு குறிப்பிட்டுள்ள தொகையை விட குறைவான விலைக்கு முழுக்கவச உடைகள் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x