Last Updated : 07 Apr, 2020 04:24 PM

 

Published : 07 Apr 2020 04:24 PM
Last Updated : 07 Apr 2020 04:24 PM

மாவட்ட நீதிமன்றங்களில் மீண்டும் பணிகள் தொடக்கம்: ஒருநாள் விட்டு ஒருநாள் ஜாமீன் மனு விசாரணை

ஊரடங்கால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட நீதிமன்றங்கள் மீண்டும் செயல்படுத் தொடங்கியுள்ளன.

வீடியோ கான்பரன்ஸ் வசதியில் ஒருநாள் விட்டு ஒரு நாள் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாவட்ட நீதிபதிகளுடன் வீடியோ கான்பரன்ஸில் நீதிமன்ற பணிகளை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒருநாள் விட்டு ஒரு நாள் என ஜாமீன் மனுக்களை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஜாமீன் மனுக்களை போதுமான விபரங்களுடன் பிடிஎப் வடிவில் madurai.ecourt@gmail.com மற்றும் komalaacrt.mgr@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விபரங்கள் முதன்மை அமர்வு நீதிபதி, அரசு வழக்கறிஞரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு விசாரணைக்கு பட்டியலிடப்படும்.

பின்னர் நீதிபதி, அரசு வழக்கறிஞர், மனுதாரர் வழக்கறிஞர், நீதிபதியின் உத்தரவை தட்டச்சு செய்பவர் ஆகியோர் செல்போனில் வீடியோ கான்பரன்ஸ் வசதியில் இணைக்கப்படுவர்.

தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் வசதியில் விசாரணை நடத்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு ஒவ்வொரு வழக்குகளும் விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

இந்த முறையில் மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று கொலை, நிதி மோசடி, அடிதடி தகராறு உள்ளிட்ட வழக்குகள் தொடர்பான 11 ஜாமீன் மனுக்களை நீதிபதி நசீமாபானு இன்று விசாரித்தார். இதில் 7 வழக்குகளில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 4 வழக்குகள் ஏப். 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x