Last Updated : 07 Apr, 2020 04:13 PM

 

Published : 07 Apr 2020 04:13 PM
Last Updated : 07 Apr 2020 04:13 PM

தென்காசி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் மேலும் 5 பேர் அனுமதி

டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் மூலம் கரோனா வைரஸ் தொற்று பலருக்கு பரவியது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மாநாட்டுக்குச் சென்றவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களது ரத்த மாதிரியை எடுத்து கரோனா பரிசோதனை ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இதில், 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்கள் 2 பேரும், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களது சொந்த ஊரான புளியங்குடி, நன்னகரம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, சுமார் 30 ஆயிரம் வீடுகளில் உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மற்ற 6 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து தென்காசி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று தென்காசியைச் சேர்ந்த ஒருவரும், மத்தளம்பாறையைச் சேர்ந்த ஒருவரும் தென்காசி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், தென்காசியைச் சேர்ந்தர் டெல்லி சென்று வந்தவர். மத்தளம்பாறையைச் சேர்ந்தவர் வெளிநாடு, வெளி மாநிலம் சென்று வரவில்லை என்று கூறியுள்ளார்.

அவருக்கு சளி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட கரோனா அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர்களது ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ஏற்கெனவே மருத்துவமனையில் இருந்த 6 பேரின் ரத்த மாதிரி மீண்டும் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இன்று மேலும் 3 பேர் தென்காசி கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் இவர், விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அந்த விமானத்தில் வந்தவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த அனைவரையும் மருத்துவமனையில் சேர்ந்து பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில், இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேபோல், சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊரான அச்சன்புதூக்கு வந்தவரின் மனைவிக்கு காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறி ஏற்பட்டதால், அவர் இன்று தென்காசி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சேர்க்கப்பட்டார்.

மேலும், தென்காசியைச் சேர்ந்த ஒருவருக்கு அறிகுறி இருந்ததால், அவரும் இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் வெளிநாடு, வெளி மாநிலத்துக்கு சென்று வரவில்லை. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் துபாய் சென்று வந்தவர். இந்த 3 பேரின் ரத்த மாதிரி நாளை சோதனைக்கு அனுப்பப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x