தேனியில் முதியோர், ஆதரவற்றோருக்கு ஆவின் பால் இலவசம்: ஆவின் தலைவர் ஓ.ராஜா தொடங்கிவைத்தார்

தேனியில் முதியோர், ஆதரவற்றோருக்கு ஆவின் பால் இலவசம்: ஆவின் தலைவர் ஓ.ராஜா தொடங்கிவைத்தார்

Published on

தேனியில் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு ஊரடங்கு முடியும் வரை இலவசமாக ஆவின் பால் வழங்கும் திட்டத்தை ஆவின் தலைவர் ஓ.ராஜா தொடங்கிவைத்தார்.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் இருந்து கடந்த செப்டம்பர் முதல் தேனி ஆவின் தனியே செயல்படத் துவங்கியது. இதற்காக தேனி என்ஆர்டி நகரில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன் தலைவராக துணைமுதல்வரின் சகோதரர் ஓ.ராஜா, துணைத் தலைவராக செல்லமுத்து ஆகியோர் உள்ளனர். தற்போது ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் ஆவின் சார்பில் முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு இலவசமாக பால் வழங்க முடிவு செய்துள்ளது.

இதன்படி கோடாடங்கிபட்டியில் உள்ள மனித நேய முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு இலவச பால் மற்றும் பால்கோவா, நெய் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது.

ஆவின் தலைவர் ஓ.ராஜா இவற்றை வழங்கி துவக்கிவைத்தார்.

இங்கு மொத்தம் 120நபர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஊரடங்கு முடியும் வரை தினமும் 18 லிட்டர் பால் வழங்கப்பட உள்ளது. இதே போல் கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதூரில் உள்ள காப்பகங்களுக்கும் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஆவின் பொதுமேலாளர் வி.ராஜாகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in