

அரசியல் சூழ்ச்சிகளில் அதிமுக அரசு செயல்படுவது சரியல்ல என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம் ஒரு கோடியே 3 லட்சத்து 71 ஆயிரத்து 878 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அத்தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.
ஒதுக்கப்பட்ட நிதிக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பின்னர் நிர்வாக அனுமதி ரத்து செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, செந்தில் பாலாஜி தலைமைச் செயலாளரின் கவனத்துக்குக் கடிதம் மூலம் கொண்டு சென்றுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.7) தன் முகநூல் பக்கத்தில், "அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
கரோனா நோயால் பாதிக்கப்பட்ட அவரது தொகுதி மக்கள் அங்குதான் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிதி ஒதுக்கீட்டை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
உயிர்காக்கும் நேரத்திலும் அரசியல் சூழ்ச்சிகளில் அதிமுக அரசு செயல்படுவது சரியல்ல. முறையான அனுமதி வழங்கி மக்களைக் காக்குமாறு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவுடன், செந்தில் பாலாஜி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தையும் மு.க.ஸ்டாலின் இணைத்துள்ளார்.