

சென்னை அருகே மறைமலை நகரில், ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த பார்வையற்றவர்கள், தங்களுக்கு உதவித்தொகை மற்றும் நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வீட்டு வேலை செய்வோர், தூய்மைப் பணியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோர் வருமானத்தை இழந்துள்ளனர்.
இதனால், உணவு தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் திணறி வருகின்றனர். அரசு நிவாரண தொகையாக 1,000 ரூபாய் அறிவித்திருந்தாலும் கூட, நான்கு, ஐந்து பேர் இருக்கும் குடும்பத்திற்கு அந்த தொகை போதுமானதாக இல்லை என்றும் வருந்துகின்றனர்.
இந்நிலையில், பார்வையற்றவர்கள் பலர் இதே நிலையில் தவித்து வருகின்றனர். பார்வையற்றவர்கள் பலர் உழைத்து வாழ்ந்து வந்தனர். ரயில் மற்றும் நடைமேடை, முக்கிய சாலை சந்திப்பு போன்ற இடங்களில் பென்சில், பேனா, பர்பி, ஊதுவத்தி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.
மேலும், பலர் நாற்காலி பிண்ணி பிழைத்து வந்தனர். தற்போது ஊரடங்கால் இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே மறைமலை நகர் சாமியார் கேட் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பார்வையற்ற குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது போதுமானதாக இல்லை என்கின்றனர்.
இது குறித்து பார்வையற்றவர் டேவிட் கூறியதாவது:
"நாங்கள் 45 ஆண்டு காலத்தில் இதுபோன்ற ஒரு சோதனையை சந்தித்ததே கிடையாது. இதனை நினைத்து பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஊரடங்கு காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு உதவிகளை செய்ய வேண்டும்.
சமூக அக்கறை கொண்டவர்களும் எங்களுக்கு உதவ வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள உதவிகள் நான்கு முதல் ஐந்து நாட்கள் மட்டுமே போதுமானது. வியாபாரம் இல்லாததால் மற்ற பொருட்கள் வாங்க எங்களிடம் நிதி இல்லை. அரசும் தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு உதவ வேண்டும்"
இவ்வாறு அவர் கூறினார்.