

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் இன்று (புதன்கிழமை) ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார் இளங்கோவன். அப்போது அவர், "பாஜக - அதிமுக உறவு குறித்த என் விமர்சனம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை.
மேலும், தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களை விடுவிக்க வேண்டும் என அதிமுக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என குற்றஞ்சாட்டினார்.
அப்போது, இளங்கோவனிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, இளங்கோவன் ஆவேசமடைந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் செய்தியாளர் சந்திப்பில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.