Published : 07 Apr 2020 07:04 AM
Last Updated : 07 Apr 2020 07:04 AM

அரிசி, மளிகை பொருட்களுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது- ஏ.எம்.விக்கிரமராஜா நம்பிக்கை

தமிழகத்தில் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. அரிசி தொடர்ந்து கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் வரத்தில் சிக்கல் நீடித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள கடைகளில் இருப்பில் உள்ள மளிகைப் பொருட்கள்தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பொருட்கள் அனைத்தும் இன்னும் 15 நாட்களுக்கு வரும் என்று சிறு வியாபாரிகள் கூறுகின்றனர்.

ஏப்.14-க்கு பிறகும்...

தமிழகத்தில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஏப்ரல் 14-ம்தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் மளிகைக் கடைகளில் உள்ள இருப்பு தீர்ந்துவிடுமோ என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

பருப்பு வகைகள், பூண்டு, எண்ணெய் எடுப்பதற்கான வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்கள் போதிய அளவு தமிழகத்தில் இல்லை. இவற்றுக்கு மகாராஷ்டிர மாநிலத்தைதான் தமிழகம் நம்பியிருக்கிறது.

ககன்தீப் சிங் உதவி

அதனால் அங்கிருந்து பொருட்களை கொண்டு வருவதற்காக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசியப் பொருள் விநியோக குழுவைச் சேர்ந்த ககன்தீப் சிங்பேடியிடம் வலியுறுத்தி இருக்கிறோம். அவரும் வெளி மாநிலங்களில் இருந்து பொருட்கள் வர உதவி வருகிறார்.

பருப்பு உடைக்கும் ஆலைகள், எண்ணெய் உற்பத்தி ஆலைகள் போன்றவற்றை இயக்கவும் அனுமதி கேட்டிருந்தோம். அதையும் விரைவில் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். அதனால் தமிழகத்தில் மளிகைப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படாது. அரிசி பற்றாக்குறை ஏற்படவே ஏற்படாது. அது தொடர்ந்து கிடைக்கும். அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x