கோவிட்-19 வைரஸால் இறந்தவர்களுக்கான காப்பீட்டுக் கோரிக்கைகளைச் செயல்படுத்துவோம்: ஆயுள் காப்பீட்டு கவுன்சில் உறுதி 

கோவிட்-19 வைரஸால் இறந்தவர்களுக்கான காப்பீட்டுக் கோரிக்கைகளைச் செயல்படுத்துவோம்: ஆயுள் காப்பீட்டு கவுன்சில் உறுதி 

Published on

அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் இறந்தவர்களுக்கான காப்பீட்டுக் கோரிக்கைகளைச் செயல்படுத்தும் என ஆயுள் காப்பீட்டு கவுன்சில் உறுதியளிக்கிறது!

இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையின் பிரதான அமைப்பான ஆயுள் காப்பீட்டு கவுன்சில், பொதுத்துறை மற்றும் தனியார் துறையின் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் மரணமடைந்தவர்களுக்கான காப்பீட்டுக் கோரிக்கைகள் அனைத்தையும் மிக விரைவாக செயல்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருதாக உறுதியளித்துள்ளது.

கோவிட்-19 தொற்றினால் இறப்பு ஏற்பட்டால் ‘ஃபோர்ஸ் மஜூர்’ [‘Force Majeure’] பிரிவு பொருந்தாது என்பதை ஆயுள் காப்பீட்டு கவுன்சில் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஒப்பந்தம் குறித்து தெளிவுபடுத்த விரும்பும் வகையில் ஒவ்வொரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை அணுகி வருவது தொடர்பாகவும், தேவையில்லாமல் பரவும் வதந்திகள் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் இது தொடர்பாக தங்களது அனைத்து வாடிக்கையாளர்களையும் தனித்தனியாகத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளன.

ஆயுள் காப்பீட்டு கவுன்சில் பொதுச்செயலாளர் [Secretary General , Life Insurance Council] கூறுகையில், ''கோவிட்-19 வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் உலக அளவிலும், உள்நாட்டிலும் தாக்கங்கள் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அனைவருக்கும் ஆயுள் காப்பீட்டின் அடிப்படை தேவை மிக மிக அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளன. மேலும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், தங்களது பாலிசிதாரர்களுக்கு தற்போதுள்ள முடக்கத்தினால் ஏற்படும் இடையூறுகளின் பாதிப்பு அதிகமில்லாதவகையில், அவசியமான சேவைகள் அனைத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தடையின்றி தொடர்ந்து கிடைக்கச்செய்வதில் முழு ஆதரவையும் அளித்து வருகிறது.

இதனால், கோவிட்-19 தொற்று மூலமான மரணத்திற்கான டெத் க்ளெய்ம் அல்லது பாலிசி தொடர்பான சேவைகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கடினமான காலங்களில் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் அவர்களுடன் இணைந்து நிற்கின்றன என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம், இதனால் தவறான தகவல் அல்லது தவறான புரிதல்களால் வாடிக்கையாளர் குழப்பமடைந்து திசைதிரும்பி விட வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in