Published : 06 Apr 2020 08:48 PM
Last Updated : 06 Apr 2020 08:48 PM

கரோனா; இந்திய அளவில் 111 பேர் உயிரிழப்பு: 86% நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆய்வில் தகவல்

இந்தியா முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் 86 சதவீதத்தினர் நாள்பட்ட நோயான சிறுநீரகப் பாதிப்பு, நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்த மத்திய அரசின் செய்தி குறிப்பு:

''கரோனா தொற்று இதுவரை 4,067 பேருக்கு பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 318 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளனர்.

தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புள்ளிவிவரங்களின் படி, தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நோயாளிகளின் விவரங்கள் குறித்துப் கீழ்க்கண்ட விவரங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்கள் பாலின அடிப்படையில் 76 சதவீதம் பேர் ஆண்கள். 24 சதவீதம் பேர் பெண்கள்.

வயது அடிப்படையில் நோயாளிகள் 47 சதவீதம் பேர் 40 வயதுக்குக் கீழானவர்கள். 34 சதவீதம் பேர் 40 முதல் 60 வயது வரையிலானவர்கள்.

19 சதவீதம் பேர் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்

இந்தியா முழுவதும் கரோனா நோய் காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

மரணம் - பாலின அடிப்படையில்

73 சதவீதம் பேர் ஆண்கள்

27 சதவீதம் பேர் பெண்கள்

மரணம், வயது அடிப்படையில்

63 சதவீதம் பேர் முதியவர்கள் (60 மற்றும் 60-க்கும் மேற்பட்டவர்கள்)

30 சதவீதம் பேர் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்

7 சதவீதம் 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்

* இறந்தவர்களில் 86 சதவீதம் பேருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், நாள்பட்ட சிறுநீரகப் பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்துள்ளன.

* தொற்று நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்று உறுதி செய்யப்பட்டவர்களில், 19 சதவீதம் பேர்தான் முதியவர்கள் என்றபோதிலும், இறந்தவர்களில் 63 சதவீதம் பேர் முதியவர்கள் என்பதால், இந்த நோய், முதியவர்களைத் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

* உயிரிழந்தவர்களில், 60 வயதுக்குட்பட்டவர்கள் 37 சதவீதம் பேர்தான் என்றபோதிலும், இறந்தவர்களில் 86 சதவீதம் பேருக்கு மற்ற நோய்களும் இருந்தது தெரியவந்துள்ளதால், பிற நோய்கள் உள்ள, இந்த வயதுக்குட்பட்டவர்களும், இந்தத் தொற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயம் அதிகமாக உள்ளது.

கரோனா தொடர்பான உண்மையான, தற்போதைய தகவல்கள் பற்றியும், கரோனா கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப விஷயங்கள், விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் பற்றியும் தெரிந்து கொள்ள, https://www.mohfw.gov.in இணையதளத்தைப் பார்க்கவும்''.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x