Last Updated : 06 Apr, 2020 07:25 PM

 

Published : 06 Apr 2020 07:25 PM
Last Updated : 06 Apr 2020 07:25 PM

குமரியில் கிராமப்புறங்களில் கபசுர நீர் விநியோகித்து தனித்திருக்குமாறு விழிப்புணர்வு:  இளைஞர்களின் களப்பணிக்கு பாராட்டு

குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிராமப்புறங்களில் கபசுர நீர் விநியோகம் பரவலாக நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் பொதுமக்களை தனித்திருக்குமாறும் வலியுறுத்துகின்றனர். இவர்களின் களப்பணிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கை கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறையினர் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் கரோனா தொற்றுள்ள 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளான நாகர்கோவில் டென்னிசன் சாலை, வெள்ளடிச்சிவிளை, மணிக்கட்டிபொட்டல், தேங்காய்பட்டணம் பகுதி சீல் வைக்கப்பட்டு அங்கு வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர நீரை அருந்த மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. கபசுர பொடிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, மார்த்தாண்டம், திங்கள்நகர்,

குளச்சல், குலசேகரம், கருங்கல், ஆரல்வாய்மொழி, களியக்காவிளை, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் தொண்டு நிறுவனங்கள், மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து கபசுர நீரை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கிராமப்புற இளைஞர்களின் இந்த முயற்சிக்கு சுகாதாரத்துறை, மற்றும் பொதுநல ஆர்வலர்ள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரியை அடுத்த மயிலாடி பக்கம் லெட்சுமிபுரத்தில் கிராம மக்களுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் கபசுர நீரை ஊர் நிர்வாகம் சார்பில் கிராமப்புற இளைஞர்கள் சேர்ந்து வழங்கினர்.

இதுகுறித்து லெட்சுமிபுரம் ஊர் தலைவர் பாபு கூறுகையில்; கரோனா அச்சத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் 12 நாட்களாக முடங்கியுள்ளனர்.

ஊரடங்கு முடிந்து நோயின்றி அவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கையை தொடங்கவும், வேலைக்கு செல்வதற்கும் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். எனவே வருமுன் காக்கும் வகையில் கபசுர குடிநீர் லெட்சுமிபுரம் மக்களுக்கு பொது இடத்தில் வைத்து விநியோகம் செய்தோம். இங்கு வரமுடியாதவர்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கினோம். மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் நடமாடவேண்டாம். வீட்டிலேயே தனித்திருக்குமாறும் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x