Last Updated : 06 Apr, 2020 07:14 PM

 

Published : 06 Apr 2020 07:14 PM
Last Updated : 06 Apr 2020 07:14 PM

கரோனாவால் இறந்தவரின் அடக்க நிகழ்வில் பங்கேற்பு: மணிகண்டன் எம்எல்ஏ தனிமைப்படுத்தி கண்காணிப்பு

ராமநாதபுரம் 

கரோனா தொற்றால் இறந்த கீழக்கரை முதியவரின் துக்க நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அவரது தந்தை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 71 வயது முதியவர், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இவர் கடந்த பிப்ரவரியில் துபாய் நாட்டிற்குச் சென்று திரும்பியுள்ளார்.

அதனையடுத்து உடல் நலக்குறைவால் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2-ம் தேதி இறந்தார். அவரது உடல் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டு வரப்பட்டு கடந்த 3-ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் கடந்த 5-ம் தேதி அவர் கரோனா தொற்றில் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அறிவித்தது.

முதியவரின் அடக்க நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்எல்ஏ, அவரது தந்தையும் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான செ.முருகேசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக விசாரணையில் தெரிய வந்தது.

அதனையடுத்து அனைவரையும் தனிமைப்படுத்தவும், கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தவும், இறந்தவரின் வீட்டைச் சுற்றி 7 கி.மீட்டர் சீலிட்டு அனைவரது வீடுகளிலும் கரோனா அறிகுறி குறித்த ஆய்வுக்கும் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் அடக்க நிகழ்வில் பங்கேற்ற எம்எல்ஏ மணிகண்டன் உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவர் என்றார்.

அதனையடுத்து மணிகண்டன் எம்எல்ஏ, அவரது தந்தை ஆகியோர், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அடக்க நிகழ்வில் பங்கேற்ற இறந்த முதியவரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

30 பேர் மீது வழக்கு:

கரோனாவில் இறந்தவரின் துக்க நிகழ்வில் 30-க்கும் மேற்பட்டோரை கூட்டியதாக அவரது மகன்கள் மீது கீழக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இறந்த முதியவரின் மகன்களான கீழக்கரை சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த ஹாஜா முஜிபுர் ரகுமான்(45), அல்லாபிச்சை(42) ஆகியோர் மீது, துக்க நிகழ்வில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி 30-க்கும் மேற்பட்டோரை கூட்டியதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளை மீறியதாவும் கீழக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இறந்தவர் குறித்து யாரிடம் தகவல் தெரிவிக்காமல், துக்க நிகழ்வில் 30-க்கும் மேற்பட்ட கூட்டத்தை கூட்டியதற்காக இறந்தவரின் மகன்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1202 பேர் மீது 987 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1208 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மூலம் வழக்குகள் நடத்தியே தீர்வு காணவும், வாகனங்களையும் மீட்க முடியும். அதனால் பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டத்தை மீறியதாக, மாவட்டத்தில் 3 தனியார் கல்வி நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x