Published : 06 Apr 2020 07:29 PM
Last Updated : 06 Apr 2020 07:29 PM

தமிழகம் மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 621 ஆனது

தமிழகத்தில் கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 50 பேர். இதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் இன்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:

“வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை 91,751. அரசுக் கண்காணிப்பில் 205 பேர் உள்ளனர். 28 நாள் கண்காணிப்பை நிறைவு செய்தவர்கள் 19,060 பேர். இன்று தொற்று எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டது 50 பேர். இதில் 48 பேர் டெல்லியிலிருந்து வந்தவர்கள். 2 பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் தொற்று எண்ணிக்கை 621 ஆக உயந்துள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 57 வயதுப் பெண் கடுமையான சுவாசத்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு அதீத நீரிழிவு, ரத்த அழுத்தம் இருந்தது. அவர் மரணமடைந்த பின்னர் எடுக்கப்பட்ட சோதனை அவருக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. திருச்சிக்கு ரயிலில் சென்று வந்துள்ளார். பயண விவரத்தை காவல்துறை, வருவாய்த் துறை உதவியுடன் சேகரிக்கிறோம்.

டெல்லி சென்று வந்தவர்களில் 1,475 பேரின் மாதிரி எடுக்கப்பட்டதில் 573 பேரின் சோதனையில் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 855 பேருக்கு தொற்று இல்லை. 44 பேர் மாதிரிகள் ஆய்வில் உள்ளன. அவர்களுடன் தொடர்பில் இருந்த 250 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது 21 ஆய்வுக்கருவிகள் வந்துள்ளன. அதைச் சோதித்து வருகிறோம். அதை எங்கெங்கு நிறுவலாம் என முடிவெடுத்தபின் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவோம். இதுவரை எடுக்கப்பட்ட தொற்று சோதனை எண்ணிக்கை 5,014.

கண்காணிப்பு நடவடிக்கையை 32 மாவட்டங்களில் செய்துள்ளோம். இன்னும் அதிவேகமாகச் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதுவரை ஆய்வு செய்யப்பட்ட கட்டிடங்கள் 11 லட்சத்து 59 ஆயிரத்து 285. அணுகிய மக்கள் 40 லட்சத்து 71 ஆயிரத்து 23 பேர். ஆய்வில் 26,953 களப்பணியாளர்கள் ஈடுபட்டனர். 104 ஹெல்ப் லைன் மூலமாக உதவி கேட்டு வந்த தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை 17,881. மற்ற ஹெல்ப் லைன்கள் மூலமாக வந்த தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை 19,787. மொத்தம் 37,668. ஒரு நாளைக்கு சராசரியாக 1,200 தொலைபேசி அழைப்புகள் உதவி கேட்டு வந்துள்ளன.

முதல்வர் கேட்டுக்கொண்டபடி நோய் எப்படி வருகிறது, யாருக்கு வருகிறது என்பது முக்கியமல்ல. நோயுற்றவர்களை நாம் கனிவாக நடத்துவோம். 1 லட்சம் ரேபிட் கிட் வரும் 9-ம் தேதி அல்லது 10- ம் தேதி வருகிறது. அதன் மூலம் விரிவாக டெஸ்ட் செய்ய உள்ளோம். அது வந்தவுடன் மாவட்டங்களில் எப்படி நடத்துவது என முடிவெடுத்துள்ளோம். அதற்கான பயிற்சி மைக்ரோ பிளான் ரெடி பண்ணுகிறோம். பின்னர் அதுபற்றி அறிவிப்போம்.

தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8 பேர் சற்று சிக்கலாக உள்ளனர். இன்று இறந்தவர் 57 வயதுப் பெண். அவர் சுவாசத்தொற்று காரணமாக இறந்துள்ளார். அவர் 20-ம் தேதி திருச்சிக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் யாருடன் பயணம் செய்தார் என்பதைச் சோதிக்கிறோம்.

தொற்று ஏற்பட்ட அரியலூர் பெண் சம்பந்தப்பட்ட 500-க்கும் மேற்பட்டவர்களைச் சோதித்து தனிமைப்படுத்தியுள்ளோம்.

கரோனா பாதிப்புள்ளவர்களுக்கு அவர்கள் நோய் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும் வண்ணம் ஒரே மாதிரியான உணவை அளிக்கிறோம்”.

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x