Published : 06 Apr 2020 05:28 PM
Last Updated : 06 Apr 2020 05:28 PM

கரோனா சிகிச்சை; தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியைப் பயன்படுத்தலாம்: விஜயகாந்த்

கரோனா சிகிச்சைக்காக திமுக அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கையும், கமல் தனது அலுவலகத்தையும், இடதுசாரிக் கட்சிகள் தம் அலுவலகங்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்த நிலையில், விஜயகாந்தும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

தமிழக அரசியல்வாதிகளில் முக்கியமான ஒருவர் விஜயகாந்த். அரசியல் கட்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சமூக சேவைகள், பொது நல உதவிகள் மூலம் பிரபலமானவர். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தனது அலுவலகத்தில் எந்நேரமும் சினிமா சம்பந்தப்பட்ட தொழிலாளிகள், உதவி இயக்குநர்கள், கலைஞர்களுக்கு உணவளித்தவர் விஜயகாந்த்.

தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் ஆண்டுதோறும் தனது கட்சி சார்பில் ஏழை மக்களுக்கு தையல் மிஷின், கிரைண்டர் என்று நிதியுதவி , தொழில் உதவிகள் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அதை தடுக்கும் முயற்சியில் தமிழகத்தின் அரசுத் துறைகள் அனைத்தும் வேகமாகச் செயல்பட்டு வருகின்றன.

எதிர்க் கட்சிகள் பலவும் இதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தங்களுடைய பங்களிப்பைச் செலுத்தி வருகின்றனர். தனித்தனியாக பொதுமக்களுக்கு, காவலர்களுக்கு, தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள், முகக்கவசங்கள், சானிடைசர்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் தங்கள் கட்சி அலுவலகங்களை இதுபோன்ற சிகிச்சைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள அரசியல் கட்சிகள் முன் வந்துள்ளன.

முதன் முதலில் கமல்ஹாசன் தனது அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்ற அனுமதி கோரினார். திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை சிகிச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையருக்குக் கடிதம் எழுதினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தம் கட்சி அலுவலகங்களைப் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்தன. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடைய கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தையும், தனது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும் கரோனா தொற்று தடுப்பு சிகிச்சைக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x