Published : 06 Apr 2020 09:42 AM
Last Updated : 06 Apr 2020 09:42 AM

மருத்துவ பரிசோதனைக்கு உட்பட வேண்டும்; தடங்கலாக இருக்கக் கூடாது; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

மருத்துவ பரிசோதனைக்கு வருகின்றவர்களின் சேவைப்பணியை மதித்து பரிசோதனைக்கு உட்பட வேண்டுமே தவிர தடங்கலாக இருக்கக் கூடாது என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.6) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா என்ற கொடிய வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு நலத்திட்டங்களை கொடுப்பது மட்டும் அரசின் பணியல்ல. ஒரு அசாதாரண சூழலில் மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் அரசு பணியில் ஈடுபடும்போது அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

அதாவது, கரோனா வைரஸ் நோய் தடுப்புக்காக தமிழக அரசும் அதன் சார்ந்த சுகாதாரத்துறையும் மிகச்சிறப்பாக பணிகளை செய்து வருவதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையும் மிகவும் வரவேற்கத்தக்கது, அவசியமானது.

முதற்கட்டமாக சென்னையில் கரோனா வைரஸ் நோய் தொடர்பாக பரிசோதனை செய்ய மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள், சுகாதாரத்துறையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து நகரம் முதல் கிராமம் வரை உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களை பரிசோதனை செய்வார்கள் எனத்தெரிகிறது.

இப்படி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று மக்கள் நலன் காக்க பணியாற்ற இருக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் ஆகியோரது பணி இப்போதைக்கு அவசிய பணியாகும்.

இவர்கள் வீடு வீடாக சென்று ஒவ்வொருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட கேட்டுக்கொள்வது அந்த நபருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அந்த பகுதிக்கும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

அப்படி மருத்துவ பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது மக்களின் கடமை. மாறாக அவர்களை மதிக்காமல் அவர்களது பணிக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் புறந்தள்ளி நிற்பது ஏற்புடையதல்ல.

கரோனாவில் இருந்து தப்பிக்க எடுக்கும் பரிசோதனைக்கு உட்படாமல் இருப்பது அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களது குடும்பத்திற்கும், அவர்கள் சார்ந்த பகுதிக்கும் நல்லதல்ல. ஏன் அவர்களது வருங்காலத்திற்கும், நாட்டின் வருங்காலத்திற்கும் நல்லதல்ல. எனவே, மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களை உதாசீனப்படுத்தாமல் அவர்களை மதித்து நடக்க வேண்டுமே தவிர தடங்கலாக இருக்கக் கூடாது.

மேலும், தமிழக அரசு என்னென்ன விதிமுறைகளை கொடுக்கிறதோ அதை அப்படியே பின்பற்றினால் அனைவருக்கும் நல்லது. எனவே, அரசின் கோட்பாடுகளை மதித்து நடக்க வேண்டும். இல்லையென்றால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டிய கட்டயாம் ஏற்படும். அதாவது, தவறு செய்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து தண்டனையும் வழங்கும்.

எனவே, தங்கள் உயிரை பணயமாக வைத்து மற்றவர் உயிர் காக்கும் பணியில் ஈடுபடுகின்ற மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களை மதித்து, ஆதரித்து அவர்களின் சேவைப்பணிக்கு தடங்கல் இல்லாமல் வழி விடுவோம், கரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்போம்" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x