Last Updated : 06 Apr, 2020 07:19 AM

 

Published : 06 Apr 2020 07:19 AM
Last Updated : 06 Apr 2020 07:19 AM

கரோனாவை மனரீதியாக தைரியமாக எதிர்கொள்ள 12 மொழிகளில் 24 மணிநேர இலவச உளவியல் ஆலோசனை- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் தன்னலமற்ற சேவை

கரோனா வைரசால் மனரீதியாக பாதிக்கப்படாமல் தடுப்பதற்காக, உளவியல் ஆலோசனையை இலவசமாக வழங்கும் சேவையை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தொடங்கியுள்ளார். இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் இச்சேவையை பயன்படுத்தி பலன் அடைந்துள்ளனர்

இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டினென்ட் கர்னல் என்.தியாகராஜன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ சிகிச்சையோடு, உளவியல் சிகிச்சையும் அளிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இந்த தொற்றால் உயிரிழப்புகள் ஒருபக்கம் நடந்து வரும் வேளையில், தேவையின்றி அச்சப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. உலக அளவில் 60 சதவீதம் பேர் கரோனா வைரஸால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தவிர்ப்பதற்காக இலவச உளவியல் ஆலோசனை வழங்கும் சேவையைத் தொடங்கிஉள்ளோம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் உட்பட12 மொழிகளில் இந்த இலவச உளவியல் ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அசாம் மற்றும் நாகாலாந்து மொழிகளிலும் ஆலோசனை தொடங்கப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு சரியான, தரமான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பதற்காக, தகுதி வாய்ந்த 54 உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வ அடிப்படையில் இவர்கள் இச்சேவையை வழங்குகின்றனர்.

பொதுமக்கள் இந்த உளவியல் ஆலோசனையை பெற விரும்பினால், www.mastermind foundation.com என்ற இணைய முகவரியில் உள்ள உளவியல் நிபுணர்களின் தொலைபேசி எண், ஆலோசனை நேரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தங்கள் சந்தேகங்கள், மனரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். தென்னிந்திய மொழிகளில் 24 மணிநேரமும் இந்த இலவச சேவை கிடைக்கும். பிற மொழிகளுக்கு தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஆலோசனை வழங்கப்படுகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் ஆலோசனை பெற்று பயன் அடைந்துள்ளனர். மேலும் ஓரிரு நாளில் அறிமுகமாகவுள்ள The Mind care என்ற செயலியும் இலவசப் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

மேலும், இமாச்சல பிரதேச சுகாதாரத் துறை, கோவை அரசுசாரா தொண்டு நிறுவனம் மற்றும் தென்மண்டல என்சிசி இயக்குநரக துணை இயக்குநர் ஜெனரல் ஆகியோர் இந்த ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். அரசுதுறைகளும் இந்த இலவசசேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளோம். கரோனா பாதிப்பை பொதுமக்கள் மனரீதியாக தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x